Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Saturday 8 September 2012

கனகாங்கி / Kanakangi Swaravahini


கனகாங்கி கருநாடக இசையின் முதல் மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் முதல் இராகத்திற்கு கனகாம்பரி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம்


 ஆரோகணம்: ஸ ரி1 க1 ம1 ப த1 நி1 ஸ் அவரோகணம்: ஸ் நி1 த1 ப ம1 க1 ரி1 ஸ
  • 72 மேளகர்த்தா திட்டத்தில் முதல் மேளம்.
  • இது இந்து என்றழைக்கப்படும் முதல் வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம்(நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
  • இது ஒரு விவாதி மேளம்.
  • நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடாத ராகம்.
  • இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் சாலகம் (37) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரிஷப சுரம் முறையே காமவர்த்தனி மேளம் (51) தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).
  • இந்த மேளத்தில் சில ஜன்ய இராகங்கள் உண்டு.


Kanakangi (pronounced Kanakāngi, Sanskrit: कनकांगि,Kannada: ಕನಕಾಂಗಿ, Telugu: కనకాంగి, Tamil: கனகாங்கி, The Golden Bodied One) is a rāgam in Carnatic music (musical scale of South Indian classical music). It is the 1st Melakarta rāgam in the 72 melakarta rāgam system of Carnatic music. It is called Kanakāmbari in the Muthuswami Dikshitar school.

It is 1st rāgam in the 1st chakra Indu. The mnemonic name is Indu-Pa. The mnemonic phrase is sa ra ga ma pa dha na.[1] Its ārohaṇa-avarohaṇa structure (ascending and descending scale) has all shuddha swaras, as follows (see swaras in Carnatic music for details on below notation and terms):
  • ārohaṇa: S R1 G1 M1 P D1 N1
  • avarohaṇa: S N1 D1 P M1 G1 R1
(the notes are shuddha rishabham, shuddha gandharam, shuddha madhyamam, shuddha dhaivatham, shuddha nishadham)
It is a sampurna rāgam – a rāgam that has all seven swaras (notes). It is the shuddha madhyamam equivalent of Salagam, which is the 37th melakarta.

Asampurna Melakarta
Kanakāmbari is the 1st Melakarta in the original list compiled by Venkatamakhin. The notes used in the scale are the same, but the ascending scale is different. It is an audava-sampurna raga (5 notes in ascending scale, while full 7 are used in descending scale).[3]
  • ārohaṇa: S R1 M1 P D1 S'
  • avarohaṇa: S N1 D1 P M1 G1 R1 S

Janya rāgams
Kanakangi has a few janya ragams associated with it, of which Karnātaka shuddha sāveri and Lavangi (a recent addition to Carnatic music by Dr. M. Balamuralikrishna) are a little popular. Kanakangi's notes when shifted using Graha bhedam, yields Kamavardani. Graha bhedam is the step taken in keeping the relative note frequencies same, while shifting the shadjam to the next note in the rāgam.

உள்ளம் உருகி சுத்தானந்த பாரதியார் ரூபகம் தளம்

http://www.youtube.com/watch?v=hTpki7HKPJk

யேசுதாஸ் பாடிய ஒரு கிருதி

http://www.youtube.com/watch?v=pTq97w72Sgc


இசைஞானி இந்த இராகத்தில் சமைத்த ஒரு பாடல்

http://www.youtube.com/watch?v=BKxLoBcfcTs

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்


ஒவ்வொரு முறையும் டாஸ்மாக்கை தாண்டி போகும்போதெல்லாம் மனசும் வயிறும் எரியும்.

தமிழகத்தில் ரேசன் கடைக்குப் போக மறுக்கும் ஆண்களின் கூட்டம் டாஸ்மாக்கில் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் சனிக்கிழமை என்றால் கூட்டம் இன்னும் அதிகமாகும்.




முன்பெல்லாம் குடிகாரர்களைக் கேவலமா பார்ப்பார்கள். ஆனால் இன்று கவர்மெண்டே சாராய வியாபாரம் செய்ய ஆரம்பித்த பிறகு குடியை fantasy-யாக மாற்றி விட்டார்கள்.

சினிமா, டிவி, பத்திரிகை என அனைத்து ஊடகங்களிலும் குடி கொண்டாடப்படுகிறது. ஹீரோக்களின் எண்ட்ரியே பாட்டில் ஓபனீங்கில் தான் ஆரம்பிக்கிறது.. ஃபேஸ் புக்கில் தண்ணியடிப்பதை சிலாகிக்கிறார்கள் சில நண்பர்கள்..

சாராய வியாபாரம் செய்வது ரவுடிப்பயலுக வேலையா இருந்ததை மாற்றி அதைப் பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்தார்கள் திராவிட ஓட்டுப்பொறுக்கிகள் .





நண்பர்கள் கூட்டத்தில் ``நீங்க தண்ணியடிப்பீங்களா பாஸ்’’ என்று திடிரென எழும் கேள்விக்கு, ``இல்ல’’ என்று பதில் சொல்பவர்கள் வெட்கப்பட வேண்டிய சூழல். ``அட என்ன பாஸ்.. தண்ணியடிக்காம நீங்களெல்லாம் எதுக்கு உயிர் வாழ்றீங்க..’’ என்ற நக்கல் வேறு வரும்.


இதில் குடிக்கும் நண்பர்கள் தவறாமல் ஒரு டயலாக்கை சொல்வார்கள்.. ``ஐயோ பாஸ்.. எப்பவாவது தான் குடிக்குறது.. அதுக்கு அடிமையாவெல்லாம் ஆக மாட்டோம்’’என்று. அதைக் கேட்டுக்கும் போதெல்லாம் அவர்களை நினைத்து பரிதாபமாக இருக்கும்.

ஒருவனுக்குச் செக்ஸ் விசயத்திலோ, லஞ்சம், ஊழல், திருட்டுத் தனம் பண்ணுவதில் வீக்னஸ் இருக்கிறது என்றால், என்றாவது ஒருநாள் அவன் சிக்கும் போது அவமானத்தில் மனம் திருந்த வாய்ப்புண்டு. கவுன்ஸ்லிங்க் மூலமாகத் திருத்தலாம். ஆனால் குடி அப்படியல்ல.. அவனின் அத்தனை நரம்புகளும் அதற்கு அடிமையாக்கப்பட்டு அதில்லாமல் அவனில்லை என்ற நிலைக்குத் தள்ளிவிடும். நூற்றில் ஒரு கேஸ் தான் தானா அறிவு வந்து திருந்துவதுண்டு.



இந்தாண்டு 18 ஆயிரம் கோடிக்கு வித்துருக்கோம் என்று சாராய வியாபாரத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தைச் சாதனையாகச் சொல்கிறார் ஜெயலலிதா. நாட்டில் இன்னும் குடிக்காமல் இருக்கும் அத்தனை பேரையும் எப்படிக் குடிகாரர்களாக்கலாம் என்று அரசாங்கம் திட்டம் தீட்டுகிறது.


சிலர் திருட்டுத்தனமாகச் சாராய வியாபாரம் செய்தபோது குடித்தவர்களின் எண்ணிக்கை கவர்மெண்டே வியாபாரம் செய்ய ஆரம்பித்தப்பிறகு நினைத்துப்பார்க்க முடியாதளவுக்கு உயர்ந்திருக்கிறது.



குடியை சகஜமாக்கியதன் விளைவு ஒருவேளை நாளை தமிழகத்தில் டாஸ்மாக் மூடப்பட்டால் தமிழகமே மனநோயாளிகளின் கூடாரமாக மாறியிருக்கும். அந்தளவுக்குக் குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது அரசின் சாராய வியாபாரம்.




டாஸ்மாக்கில் சிறுவர்களோ, பொம்பளப்பிள்ளையோ காசை நீட்டுனா பாட்டில்.. அது மட்டும் தான் ஓட்டுப்பொறுக்கிகளின் பாலிஸி. பணம்.. பணம்.. எப்படியாவது மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் விஷமாகி குடிகாரர்கள் இறக்கிறார்கள் என்பதற்காகக் கவர்மெண்டே சாராய வியாபாரம் செய்வதை எப்படி ஏற்க முடியும். ஒரு தவறை திருத்த நடவடிக்கை எடுப்பது சரியா.. இல்லை ஸ்லோ பாய்ஸன் தயாரிப்பது சரியா..


இதில் ஆட்டோ டிரைவரும் ஐ.டி.காரனும் ஒண்ணா தண்ணியடிக்குறதை தடுக்கு எலைட் பார் வேறு.



கருணாநிதி ஜெயலலிதாவுக்கிடையே பரஸ்பரம் எவ்வளவு கொலைவெறி இருந்தாலும் இந்தச் சாராய வியாபாரத்துல மட்டும் அவ்வளவு ஒற்றுமை. எந்த ஆட்சி மாறினாலும் அதற்கு மட்டும் தடையில்லை. கருணாநிதி ஆட்சியிலும் சசியின் மிடாஸில் இருந்து தான் சரக்கு சப்ளையானது.

ஒரு குடும்பத் தலைவனைக் குடிக்கு அடிமையாக்கி அவனின் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாயை ஆட்டையப்போடும் அரசு, அதில் ஒரு ரூபாயை அரிசி, மிக்ஸி, ஃபேன் என்று இலவசங்கள் கொடுக்கப் பயன் படுத்துகிறது. எவ்வளவு கேவலமான திருட்டு.. பணம் கிடைக்கிறது என்பதற்காக எங்கள் தலைமுறையையே போதைக்கு அடிமையாக்குறார்கள்.
வீச்சருவாளும் கையுமா பனங்காட்டுக்கு நடுவிலும், ஒடங்காட்டுக்கு நடுவிலும் போலீசுக்கு தெரியாமல் பதுங்கியிருந்து வெள்ளை கேனில் சாராயம் வித்தவர் கந்தையா அண்ணாச்சி. சிறுவனாக இருந்த போது ஒரு முறை தாத்தா ஒருவருக்காகப் பாக்கெட் சாராயம் வாங்க நண்பனோடு போனபோது, ``சாராயம் வாங்க வர்ற அளவுக்குப் பெரியாளாயிட்டிங்களாடா.. போய் பெரியவங்கள வந்து வாங்க சொல்லுங்க’’னு பொடதில தட்டி விரட்டுனார் கந்தையா அண்ணாச்சி.

அவர் என்றைக்கும் ஒரு சின்னப்பயனுக்குச் சாராயம் கொடுத்து பார்த்ததில்லை.

ஆனால் பணம் கிடைக்கிறது என்பதற்காகச் சிறுவர்களைக் கெடுத்துவிடக்கூடாது என்று நினைத்த படிக்காத கந்தையாக்களிடம் இருந்த நேர்மை, இந்த ஓட்டுப்பொறுக்கிகளிடம் இல்லை..
இதை எழுதுவதற்கு உனக்கென்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறீர்களா.. ஒரு குடிகாரரின் பிள்ளை என்ற சிறப்பான தகுதி எனக்குண்டு.. :(
Posted by cartoonist bala in his blog ( மேல் உள்ள கருத்துக்கள் கார்டூனிஸ்ட் பாலாவின் குமுறல்கள் ) [ பலரின் குமுறலும் அதுதான் ]


                                                           



பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை தனியாரிடம் விட்டுவிட்டு அரசுகள் மதுக்கடைகளை நடத்தத் தொடங்கியுள்ளன. அரசு எந்திரம் இலக்கு வைத்து மதுபான விற்பனையை அதிகப்படுத்தியுள்ளன. பள்ளி, கல்லூரிகள், கோயில், மருத்துவமனை, குடியிருப்பு ஏன் சமத்துவபுரங்களில் கூட டாஸ்மாக் கடைகள் திறக்கக்கப்படுகின்றன.




சாலையோரங்களில் இருக்கும் டாஸ்மாக் மதுபானக்கடையில் குவாட்டர் வாங்கி மூடியைத்திறந்து அப்படியே ராவாக மடமடவென்று குடித்துவிட்டு அப்படியே நிதானமிழந்து வீழ்பவர்களை நாம் தினந்தோறும் பார்க்க முடியும். இதன் காரணமாக நிகழும் சாலை விபத்துகள் ஏராளம். மதுவைத் தவிர பிற காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் பாதசாரிகளின் உயிருக்கு உத்திரவாதமின்றி அமைக்கப்படுகின்றன. சைக்கிளில் செல்வோரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது. எவ்வளவோ தொழில்நுட்பங்கள் முன்னேறியிருக்க சைக்கிள் பின்புற பிரதிபளிப்பான் (indicators) இன்னும் பழையபடிதான் உள்ளது. அதுகூட எதேனும் லேசாக மோதினால்கூட நொறுங்கிவிடும். சாலைகளில் மரங்களில் ஒட்டப்படும் பிரதிபளிப்பான் கூட பரவாயில்லை. சைக்கிள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஏன் இவற்றை கவனிக்க மறுக்கின்றன. பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள் சாலைகளில் சென்று வீடு திரும்புவது உறுதியில்லாத நிலை உள்ளது.
திருவாரூர் – திருத்துறைப்பூண்டி மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி குடிபோதை சாலை விபத்துகள் நடந்தேறுகின்றன. சென்ற ஆண்டில் மணலி கிராமத்திற்கருகே நடந்த சாலை விபத்தொன்றால் நான் பல கிலோ மீட்டர் தூரம் நடந்துவர வேண்டிய நிலை ஏற்பட்டது.
திருத்துறைப்பூண்டி திருவாரூர் நெடுஞ்சாலையில் ஆலத்தம்பாடி, மணலி ஆகிய கிராமங்களுக்கு இடையில் பழையங்குடி ஊராட்சிப் பகுதியில் தலைவர் ஏ.எஸ்.பாண்டியன் மதுபான கடைப்பகுதி என எச்சரிக்கைப் பலகை வைத்துள்ளார். தமிழகமெங்கும் இந்த மாதிரி எச்சரிக்கைப் பலகை வைக்கவேண்டும். தலித் குடியிருப்புகள் நிறைந்த இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. குடிபோதை விபத்துகள் அடிக்கடி நிகழும் இப்பகுதியில் வேறுவழியின்றி ஊ.ம.தலைவர் எச்சரிக்கைப் பலகை வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக வேகத்தடைகள் அமைக்க கோரிக்கைகள் வரலாம். தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளிக்கூடப் பகுதிகளில்கூட வேகத்தடைகள் வைக்கப்படுவதில்லை.
பள்ளிப்பகுதிகளில் வருங்கால அப்துல் கலாம்கள் நடமாடும் இடம் என்று பல இடங்களில் விளம்பரப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நமது குழந்தைகளை இதைவிட மோசமாக இழிவுபடுத்தமுடியும் என எனக்குத் தோன்றவில்லை. இதைப்போல ஒவ்வொரு டாஸ்மாக் கடை அருகே சாலைகளில் மாநில அரசின் வருவாயைப் அதிகரிக்கும் புரவலர்கள் நடமாடும் இடம் வாகனங்கள் மெதுவாகச் செல்லவும் என்றுஅறிவிப்புப் பலகைகள் வைக்கலாம்.
மக்கள் நலனைக் கணக்கில்கொள்ளாது வருவாயை மட்டும் நம்பி அரசு நடத்தும் டாஸ்மாக் சூதாட்டத்தில் அப்பாவி ஏழை கூலித்தொழிலாளிகள் பலியாவது வேதனையான உண்மை. கள்ளுக்கடைகளை மூடிவிட்டு சசிகலா, விஜய் மல்லையா போன்ற சாராய முதலைகள் நலன்கள் மட்டும் அரசால் பாதுகாக்கப்படுகின்றன.



100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்படும் கூலித்தொகையில் பெரும்பகுதி டாஸ்மாக் கடைகளையே சென்றடைகிறது. குடியால் உடல்நலம் கெட்டு மரணமடைவது ஒருபுறமிருக்க குடிபோதை விபத்துகள் நடப்பதால் பல்லாயிரம் உயிர்கள் மாண்டுபோகிறது. ஜெ.ஜெயலலிதாக்களும் மு.கருணாநிதிகளும் இந்நிலை நீடிக்கவே விரும்புகிறார்கள்.



அப்போதுதான் குவாட்டர் பாட்டிலில் குடிமகனின் வாக்கைத் தக்கவைக்க முடியும் என்பது இவர்களது அசாத்திய நம்பிக்கை. இதை மாற்றக்கூடிய சக்தி நமது குடிமகன்களிடம் இருக்கிறதா என்பதே நம்முன் எழும் மிகப்பெரிய கேள்வி.

டாஸ்மாக் தான் இந்த மாநிலத்தின் விலாசமாகி போனது என்றால் அது மிகையல்ல.
ஆம் தெருக்கு மூணு டாஸ்மாக்கை திறந்துக் கொண்டிருக்கும் அரசின் போக்கு அப்படித்தான் உள்ளது. டாஸ்மாக் என்ன பாரம்பர்ய கம்பெனியா?

இல்லவே இல்லை- அதன் ஆரம்பம் வெறும் 29 வருடங்களுக்கு முன்புதான்.

1937 ஆம் ஆண்டு தமிழகத்திற்க்கு மதுவிலக்கை கொண்டு வந்தது சி ராஜாகோபாலச்சாரிதான். ஆனால் டாஸ்மாக் என்னும் மொத்த குத்தகை சாராய வியாபாரியை உரு ஆக்கிய பெருமை எம்ஜிஆரை தான் சேரும்.

1983 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த நிறுவனம் முதலில் எல்லா தயாரிப்பாளர்களின் உற்சாக பானத்தையும் மொத்தமாக வாங்கி தமிழகத்தின் எந்த ஒரூ மூலை முடுக்கு ஹோட்டல்கள் மற்றும் பார்களுக்கும் சப்ளை செய்து வந்தது.

சி ராஜகோபால் கொண்டு வந்த மதுவிலக்கு என்ன ஆயிற்று என கேட்டால்- ஆம் அது 1937 – 2001 ஆம் ஆண்டு வரை இருந்தது.

இந்நிலையில் அதை உடைத்து முதன் முதல் தமிழகத்தில் குடிமகனாக உருவாக்கிய பெருமை கலைஞருக்குத்தான் சேரும்.

ஆம் அவர் அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு இறந்த போது இடைக்கால முதலமைச்சரானார். அடுத்து நான் முதலைமச்சராக வந்தால் மதுவிலக்கை ஒழிப்பேன் என்பது ஒரு மெயின் தேர்தல் அஜென்டா ஆக்கி 1971 ஆம் ஆண்டு ஆட்சி கட்டிலில் உட்கார்ந்த போது தமிழகத்தில் முழு மதுக்கொள்கையை கொண்டு வந்து அதை 1974 முடிவுக்கு கொண்டு வந்த பின் 1976 தேர்தலில் தோற்றும் போனார்.

அதை ஒரு பெரிய அஜென்டாவாக்கி முதலைமச்சர் ஆனார் எம்ஜிஆர்- 1977 ஆம் ஆண்டு.
ஆனால் மது என்ற போதை வஸ்து இல்லாமல்போனால் நம்மின் அடுத்த ஆட்சி சந்தேகத்திற்க்கு உள்ளாகும் என தெரிந்து 1981 – 1987 ஆம் ஆண்டு வரை அது தமிழகத்தை அழிவு பாதைக்கு கொண்டு சேர்த்தது.

இதற்க்கிடையில் சாராய வியாபாரியாக சில உடையார்கள் படையார்கள் உலா வந்த நேரத்தில் தான் 1983 ஆம் ஆண்டு மது உண்டு ஆனாலும் அது அரசின் கேட் வே மூலம் என்று டாஸ்மாக் உதயமாயிற்று.

பழைய குருடி கதவை திறடி கதை தான் மதுவிலக்கு

ஆட்சி கட்டிலில் உட்கார்ந்த ஒரே வருடத்தில் மீண்டும் மதுவியாபரத்தை கொண்டு வந்தது ஜெயலலிதா தான் 1990 – 91.

இப்படியே ஒவ்வொரு முதலமைச்சரும் பந்தாடிய ராஜாகோபாலாச்சாரியின் மதுவிலக்கு 2001 ஆம் நிரந்தரமாக அடக்கம் செய்யபட்டது.
அரசு சாராயக்கடை – கடா மார்க் ஊருக்கு ஒரு அரசு சாராய ஃபாக்டரி எல்லாம் இந்த காலகட்டத்தில் தான்.

இருந்தாலும் ஒரு கிளாஸ் 8 ரூவா ஒரு முழு பாட்டில் 40 ரூவா வரை இருந்த சாராய வியாபாரத்தால் பெரிதாக சாதிக்கமுடியாமல் போனதால் அரசே இந்த நவீன சுடுகாட்டை தெருக்கு தெரு கொண்டு வந்து சேர்த்து மட்டுமில்லாமல் உலகின் நெ-1 பிராஃபிட் அரசு கம்பெனியாக உருவெடுத்தது என்றால் மிகையில்லை.

சார்ந்த ஒயின்ஷாப், ஜாதிக்காரர்களின் ஒயின்ஷாப் ஆதிக்கம், உள் அடி விலை வைத்து ஏலத்தை ஏய்ப்பது எடுத்தவனை வெட்டுவது என தனியார் ஒயின்ஷாப்பை முதலில் இரும்பு கரம் கொண்டு அடக்கி தமிழகத்தில் திராவிட அரசே பெரிய தில்லாலங்கடி இதுல நீங்க எதுக்குன்னு முதன் முதலாய் 29 நவம்பர் 2003 ஆண்டு அரசு விற்க வேண்டிய கல்வியை தனியாருக்கு கொடுத்து தனியார் விற்க வேண்டிய சாராய பிஸினஸை அரசு எடுத்து கொன்டு ஆரம்பித்த தனிகாட்டு பிஸினசை 2004 ஆண்டு முதல் எல்லா பிரைவேட் ஒயின்ஷாப்புகளுக்கும் அரசின் பச்சை பெயிண்ட் அடிக்கபட்டு கையகப்படுத்தபட்டது.


2003 – 2004 ஆம் ஆண்டு வருமானம் 2828.09 கோடியாய் இருந்த வியாபரம் வருடத்திற்க்கு 100% சதவிகிதம் என அதிகரித்து 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக.
இப்போது பிஸினஸ் 7300 கோடியாய் இருக்கும் இந்த தங்க சுரங்கத்தை மூடினால் அதில் கிடைக்கும் 58 – 73% சதவிகித வரி பணத்தை இழக்க தயாராய் இல்லாமல் அதற்க்கு உரம் போட்டு வளர்த்து இன்றோடு 9 வருட டாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் சுமார் 21,000 கோடிகளாய் நின்றால் உலகின் முதல் லாபத்தோடு இயங்கும் அரசு கம்பெனி இதை தவிர வேறு என்ன இருக்கமுடியும்.

சாதாரண சரக்குக்கு 58% வரை வரி, ஃபாரின் லிக்கருக்கு 73% வரி இந்த பிஸினஸை தவிர வேறு எதனால் தரமுடியும் என வளர்த்த கட்சிகளோ அல்லது அதை தாங்கி பிடித்த கூட்டணி கட்சிகளும் இப்போது நீலி கண்ணீர் வடித்தால் என்ன செய்ய முடியும்.
மது விலக்கு இப்போது அமுலுக்கு மட்டும் வந்தால் பலரின் நிலமை என்னவாகும் என்று யாருக்கு தெரியாது???

ஆனால் விளைவுகள் முதல் இரண்டு வருடங்களில் வருமானம் ஆகட்டும், கள்ள சாராயமாகட்டும், பர்மாபஜார் சரக்கு வியாபாரம் ஆகட்டும் ஒரு பெரிய சவால்தான்.
ஆம் ஒரு விஷயம் தமிழகத்தில் 92% சதவிகிதம் கள்ள சாராயம் காய்ச்சுவது ஒழிந்தாலும் இன்று ஆயிரம் மடங்கு வளர்ந்து நிற்கும் குடிகாரர்களின் நிலைமை……………


55. கொடுங்கோல் மன்னவன் நாட்டின் ......

படுங்கோலம் அறியாமல் தண்டலையார்
திருப்பணிக்கும் பங்கம் செய்வார்!
நெடுங்கோளும் தண்டமுமாய் வீணார
வீணனைப்போல் நீதி செய்வார்!
கெடுங்கோபம் அல்லாமல் விளைவுண்டோ?
மழையுண்டோ? கேள்வி யுண்டோ?
கொடுங்கோல்மன்னவன் நாட்டிற் கடும்புலிவா
ழுங்காடு குணமென் பாரே!


(தொ-ரை.) படும் கோலம் அறியாமல் தண்டலையார் திருப்பணிக்கும்
பங்கம் செய்வார் - அடையப்போகும் தன்மையை உணராமல் தண்டலையாரின் திருத்தொண்டுக்கும் குறைவு புரிவார்கள், வீணார வீணனைப்போல் நெடுங்கோளும் தண்டமுமாய் நீதிசெய்வார் - வீணார வீணன் என்பானைப் போலப் பெரிய கொலையும் தண்டனையுமாக அரசியல் புரிவர், (இதனால்) கெடும்கோபம் அல்லாமல் விளைவு உண்டோ மழை உண்டோ கேள்வி உண்டோ - (தம்மைக் கெடுக்கும்) சீற்றமேயன்றி நாட்டில் விளைவும் மழையும் கேள்விமுறையும் இருக்குமோ?, கொடுங்கோல் மன்னவன் நாட்டில் கடும்புலி வாழும் காடு குணம் என்பார் - முறைதவறிய அரசன் வாழும் நாட்டில் வாழ்வதினும் கொடிய புலி வாழும் காடு நலந்தரும் என்று அறிஞர் கூறுவர்.

(வி-ரை.) கோள் - கொலை. அரசன் ஆட்சி நன்றாயிருப்பின்
மழைபெய்து விளைவு பெருகி நாடு வளமுற்றிருக்கும். இன்றேல் இவை
அழியும் என்று உலகம் கூறும். ‘கொடும்கோல் மன்னன் வாழும் நாட்டில்
- கடும்புலி வாழும் காடு நன்றே' என்று வெற்றி வேற்கை கூறும்.
வீணன் : வீணாறு என்னும் ஆற்றை வெட்டியவன்.
இவ் உலகில் சாராயம் விற்கும் இரு அரசுகள் கேரளா , தமிழ்நாடு.
என் தமிழ்நாடே ! உன் மனம் நிம்மதி அடைந்ததோ !
எஞ்சி இருந்த மானமும் குடித்துக் குடித்துக் குடித்துக்கொண்டே மண்ணாகி போனதே !
நடை பிணமாய் வாழ்ந்தென்ன ! மனங்கேட்டவர்களே !
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் !

பி கு : கூல்ட்ரிங்க்ஸ் மாதிரி டாஸ்மாக் ஆகாமல் இருந்தால் சரிதான்




இனியவை நாற்பது


இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள 'நாற்பது' எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன் ஆவார். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும். இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அந்நூலாசிரியருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது.

இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப் பட்டுள்ளது. இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது.

வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.

    கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே;
    தொல் மாண் துழாய் மாலை யானைத் தொழல் இனிதே;
    முந்துறப் பேணி முகம் நான்கு உடையானைச்
    சென்று அமர்ந்து ஏத்தல் இனிது.


தாள் - திருவடி தொழல் - வணங்குதல்

மூன்று கண்களையுடைய சிவபெருமானது திருவடிகளை அடைதல் இனிது. பழமையான திருத்துழாய் மாலையை அணிந்த திருமாலை வணங்குதல் இனிது. நான்கு முகங்களை உடைய பிரமதேவன் முன் அமர்ந்து அவனை வாழ்த்துதல் இனிது.

பாடல்: 01 (பிச்சை புக்காயினும்...)

    பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே;
    நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே;
    முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,
    தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. 1


இனிது - நல்லது சேர்வு - சேர்தல்

பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.
பாடல்: 02 (உடையான்...)

    உடையான் வழக்கு இனிது; ஒப்ப முடிந்தால்,
    மனை வாழ்க்கை முன் இனிது; மாணாதாம் ஆயின்,
    நிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல்
    தலையாகத் தான் இனிது நன்கு. 2


வழக்கு - ஈகை துறத்தல் - விடுதல்

பொருள் உடையவனது ஈகை இனிது. மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. நிலையாமையை ஆராய்ந்து முற்றும் துறத்தல் நன்கு இனிது.
பாடல்: 03 (ஏவது மாறா...)

    ஏவது மாறா இளங் கிளைமை முன் இனிதே;
    நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே;
    ஏருடையான் வேளாண்மைதான் இனிது; ஆங்கு இனிதே,
    தேரின், கோள் நட்புத் திசைக்கு. 3


ஏவல் - ஏவுதல் வேளாண்மை - உழவு

சொன்ன வேலைகளை மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிதாகும். குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லுந்திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது.
பாடல்: 04 (யானையுடை...)

    யானையுடைப் படை காண்டல் மிக இனிதே;
    ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே;
    கான் யாற்று அடை கரை ஊர் இனிது; ஆங்கு இனிதே,
    மானம் உடையார் மதிப்பு. 4


அடை - முல்லை

அரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல் இனிது. தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. முல்லை நிலத்தில் ஆற்றினது நீராட கரைக்கண் உள்ள ஊர் இனிது. அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.
பாடல்: 05 (கொல்லாமை...)

    கொல்லாமை முன் இனிது; கோல் கோடி, மா ராயன்,
    செய்யாமை முன் இனிது; செங்கோலன் ஆகுதல்,
    எய்தும் திறத்தால், இனிது என்ப; யார் மாட்டும்
    பொல்லாங்கு உரையாமை நன்கு. 5


யார் மாட்டும் - யாவரிடத்தும்

கொல்லாமை முன் இனிது. அரசன் நடுவு நிலைமை தவறி சிறப்பு செய்யாமை இனிது. செங்கோலனாக இருப்பது இனிது. யாவரிடத்தும் திறமையால் கூடியமட்டும் குற்றம் கூறாமை மிக இனிது.
பாடல்: 06 (ஆற்றும்...)

    ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே;
    பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே;
    வாய்ப்பு உடையாராகி, வலவைகள் அல்லாரைக்
    காப்பு அடையக் கோடல் இனிது. 6

மாண்பு - மாட்சிமை

கூடிய மட்டும் தருமம் செய்தல் இனிது. சான்றோர்களின் பயனுடைய சொல் இனிது. கல்விச் செல்வம் அதிகாரம் ஆண்மை முதலிய எல்லாம் இருந்தும் 'நான்' என்ற குணம் இல்லாதவனைத் துணையாகக் கொள்வது இனிது.
பாடல்: 07 (அந்தணர்...)

    அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே;
    பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே;
    தந்தையே ஆயினும், தான் அடங்கான் ஆகுமேல்,
    கொண்டு அடையான் ஆகல் இனிது. 7

பந்தம் - உறவு ஆண்மை - வீரம்

பிராமணர்க்கு வேதம் ஓதுதல் இனிது. இல்லறத்தாருக்கு பற்றுபாசம் இனிது. படையுடையானுக்கு வீரம் இனிது. தந்தையே ஆனாலும் அவர் கூறும் தவறானவற்றைச் செய்யாமை இனிது.
பாடல்: 08 (ஊரும் கலிமா...)

    ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே;
    தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெஞ்சமத்துக்
    கார் வரை போல் யானைக் கதம் காண்டல் முன் இனிதே;
    ஆர்வம் உடையார் ஆற்றவும் நல்லவை,
    பேதுறார், கேட்டல் இனிது. 8


கலிமா - குதிரை தார் - மாலை

வீரனுக்கு வலிமையான குதிரை இனிது. மாலையணிந்த அரசர்களுக்கு போர்க்களத்தில் கரிய மலைபோன்ற யானைகள் சினம் கொண்டு போரிடுதலைப் பார்த்தல் இனிது. அன்புடையார் வாய்ச் சொற்கள் கேட்பது இனிது.
பாடல்: 09 (தங்கண்...)

    தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே;
    அம் கண் விசும்பின் அகல் நிலாக் காண்பு இனிதே;
    பங்கம்இல் செய்கையர் ஆகி, பரிந்து யார்க்கும்
    அன்புடையர் ஆதல் இனிது. 9


அகல் நிலா - விரிந்த நிலா காண்பு - காணுதல்

தம்மை ஒட்டி வாழும் நண்பர்கள் செல்வத்துடன் வாழ்தல் இனிது. அழகிய அகன்ற வானத்தில் விரிந்த நிலாவைக் காணுதல் இனிது. குற்றமில்லாத செய்கை உடையவராய் அன்புடையவராயிருத்தல் இனிது.
பாடல்: 10 (கடம்உண்டு...)

    கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே;
    நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே;
    மன மாண்பு இலாதவரை அஞ்சி அகறல்
    எனை மாண்பும் தான் இனிது நன்கு. 10


நீக்கல் - விலக்குதல் அஞ்சி - பயம்

கடன் வாங்கி வாழாமல் இருத்தல் இனிது. கற்பில்லாத மனைவியை நீக்கிவிடுதல் இனிது. மனத்தின்கண் பெருமை இல்லாதவரை விட்டு அஞ்சி அகலுதல் எல்லாவற்றையும் விட மிக இனிது.
பாடல்: 11 (அதர்...)

அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே; குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே; உயிர் சென்று தாம் படினும், உண்ணார் கைத்து உண்ணாப் பெருமைபோல் பீடு உடையது இல். 11


அதர் சென்று - வழி சென்று குதர் சென்று - தவறான வழி

தவறான வழியிற் சென்று வாழாதிருப்பது இனிது. தவறான வழியிற் பொருள் தேடாமை மிக இனிது. உயிரே சென்றாலும் உண்ணத்தகாதார் இடத்து உணவு உண்ணாதிருத்தல் மிக இனிது.
பாடல்: 12 (குழவிபிணி...)

    குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே;
    கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே;
    மயரிகள் அல்லராய், மாண்புடையார்ச் சேரும்
    திருவும், தீர்வு இன்றேல், இனிது. 12


குழவி - குழந்தை திரு - செல்வம்

குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது. சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. தெளிவான பெருமை உடையவரின் செல்வம் நீங்காமை இனிது.
பாடல்: 13 (மானம்...)

    மானம் அழிந்தபின், வாழாமை முன் இனிதே;
    தானம் அழியாமைத் தான் அடங்கி, வாழ்வு இனிதே;
    ஊனம் ஒன்று இன்றி, உயர்ந்த பொருள் உடைமை
    மானிடவர்க்கு எல்லாம் இனிது. 13


ஊனம் - குறைபாடு

மானம் அழிந்தபின் வாழாமை மிக இனிது. செல்வம் சிதையாதபடி செல்வத்திற்குள் அடங்கி வாழ்தல் இனிது. குறைபாடு இல்லாத சிறந்த செல்வத்தைப் பெற்று வாழ்வது மிக இனிதாகும்.
பாடல்: 14 (குழவி...)

    குழவி தளர் நடை காண்டல் இனிதே;
    அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே;
    தவினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்து,
    மனன் அஞ்சான் ஆகல் இனிது. 14


தளர் நடை - தளர்ந்த நடை

குழந்தைகளது தளர்ந்த நடையைக் காணுதல் இனிது. அவர்களின் மழலைச் சொல் கேட்டல் இனிது. தீயவர்களின் சினத்தைக் கண்டபோதும் மனம் அஞ்சாமல் இருப்பது இனிது.
பாடல்: 15 (பிறன்மனை...)

    பிறன் மனை பின் நோக்காப் பீடு இனிது ஆற்ற;
    வறன் உழக்கும் பைங் கூழ்க்கு வான் சோர்வு இனிதே;
    மற மன்னர் தம் கடையுள், மா மலைபோல் யானை
    மத முழக்கம் கேட்டல் இனிது. 15


பீடு - பெருமை

பிறனுடைய மனைவியை திரும்பிப் பாராத பெருமை இனிது. நீரில்லாமல் வாடும் பசிய பயிர்களுக்கு மழை பொழிதல் இனிது. வீரத்தையுடைய அரசர்களின் அரண்மனையில் பிளிற்றொலியைக் கேட்பது இனிது.
பாடல்: 16 (கற்றார்...)

    கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே;
    மிக்காரைச் சேர்தல் மிக மாண முன் இனிதே;
    எள் துணையானும் இரவாது தான் ஈதல்
    எத்துணையும் ஆற்ற இனிது. 16


ஈதல் - கொடுத்தல்

கற்றவர்களின் முன் தான் பெற்ற கல்வியை உணர்த்துதல் இனிது. அறிவின் மேம்பட்டவர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது. எவ்வளவு சிறிதாயினும் தான் இரவாது பிறருக்குக் கொடுத்தல் எல்லாவற்றையும் விட இனிதாகும்.
பாடல்: 17 (நட்டார்க்கு...)

    நட்டார்க்கு நல்ல செயல் இனிது; எத்துணையும்
    ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன் இனிதே;
    பற்பல தானியத்ததாகி, பலர் உடையும்
    மெய்த் துணையும் சேரல் இனிது. 17


நட்டார் - நண்பர்

நண்பர்களுக்கு இனியவற்றைச் செய்தல் இனிது. அதனைவிட எள் அளவும் நட்பு இல்லாதவர்களை நண்பர்களாக்கிக் கொள்வது அதனைவிட இனியது. எல்லாவகைப் பொருட்களை உடையவராய் சமயத்தில் உதவும் நண்பர்களைத் துணையாக வைத்துக் கொள்வது இனிது.
பாடல்: 18 (மன்றில்...)

    மன்றில் முதுமக்கள் வாழும் பதி இனிதே;
    தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே;
    எஞ்சா விழுச் சீர் இரு முது மக்களைக்
    கண்டு எழுதல் காலை இனிது. 18


தந்திரம் - நூல் முதுமக்கள் - அறிவுடையோர்

அறிவுடையவர்கள் வாழுகின்ற ஊரில் வாழ்வது இனியது. அறநூல்படி வாழும் முனிவர்களின் பெருமை இனியது. தாய் தந்தையரைக் காலையில் கண்டு வணங்குதல் இனிது.
பாடல்: 19 (நட்டார்ப்...)

    நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே;
    பட்டாங்கு பேணிப் பணிந்து ஒழுகல் முன் இனிதே;
    முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றுஅது
    தக்குழி ஈதல் இனிது. 19


பேணி - பாதுகாத்து ஈதல் - கொடுத்தல்

நட்பு கொண்டவர்களைப் பற்றி புறம் கூறாமல் இருத்தல் இனியது. சத்தியத்தை பேணிப் பாதுகாத்து வாழ்தல் மிக இனியது. பெரும் பொருளைத் தேடி அதனைத் தக்கவர்களுக்கு ஈதல் மிக இனிது.
பாடல்: 20 (சலவரை...)

    சலவரைச் சாரா விடுதல் இனிதே;
    புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே;
    மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
    தகுதியால் வாழ்தல் இனிது. 20


சலவரை - வஞ்சகரை ஞாலத்து - பூமியில்

வஞ்சகர்களை நீக்குதல் இனியது. அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது.
பாடல்: 21 (பிறன்கை...)

    பிறன்கைப் பொருள் வெளவான் வாழ்தல் இனிதே;
    அறம்புரிந்து, அல்லவை நீக்கல் இனிதே;
    மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
    திறம் தெரிந்து வாழ்தல் இனிது. 21


வௌவான் - அபகரிக்காமல் மயரிகள் - அறிவிலிகள்

பிறருடைய கைப்பொருளை அபகரிக்காமல் வாழ்வது இனியது. தர்மம் செய்து பாவத்தை நீக்குதல் இனிது. மாட்சிமை இல்லாத அறிவிலிகளைச் சேராத வழிகளை ஆராய்ந்து வாழ்தல் இனிது.
பாடல்: 22 (வருவாய்...)

    வருவாய் அறிந்து வழங்கல் இனிதே;
    ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே;
    பெரு வகைத்து ஆயினும், பெட்டவை செய்யார்,
    திரிபு இன்றி வாழ்தல் இனிது. 22


வழங்கல் - கொடுத்தல் ஊக்கம் - மனவெழுச்சி

தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது. ஒருவனுக்குச் சார்பாகாத ஒழுக்கம் இனிது. பெரிய யானையை உடையவராயினும் தாம் விரும்பியவற்றை ஆராயாது செய்யாதவராய், தம் இயல்பிலிருந்து மாறாதவராய் வாழ்தல் இனிது.
பாடல்: 23 (காவொடு...)

    காவோடு அறக் குளம் தொட்டல் மிக இனிதே;
    ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே;
    பாவமும் அஞ்சாராய், பற்றும் தொழில் மொழிச்
    சூதரைச் சோர்தல் இனிது. 23


தொட்டல் - வெட்டுதல் ஆ - பசு

சோலையுடன் கூடிய பொதுக் குளத்தை வெட்டுதல் இனிது. அந்தணர்க்குப் பசுவோடு பொன்னைக் கொடுத்தல் இனிது. பாவத்திற்கு அஞ்சாமல் சூதாடுகிறவர்களை நீக்கி வாழ்தல் இனியது.
பாடல்: 24 (வெல்வது...)

    வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே;
    ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே;
    இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார்
    செய்வது செய்தல் இனிது. 24


வெகுளி - கோபம் பொறை - பொறுத்தல்

மேம்படுத்தலை விரும்பி கோபம் இல்லாமல் இருப்பவனின் தவம் இனியது. எடுத்துக் கொண்ட வேலையை முடிக்கும் ஆற்றல் உடையவனின் பொறுமை மிக இனிது. தம்மிடம் இல்லாத பொருளை நினைத்து துன்பப்படாமல் இருப்பது இனிது.
பாடல்: 25 (ஐவாய...)

    ஐ வாய் வேட்கை அவா அடக்கல் முன் இனிதே;
    கைவாய்ப் பொருள் பெறினும், கல்லார்கண் தீர்வு இனிதே;
    நில்லாத காட்சி நிறை இல் மனிதரைப்
    புல்லா விடுதல் இனிது. 25


வேட்கை - ஆசை புல்லா - சேராது

ஐந்து வழியால் வருகின்ற ஆசைகளை அடக்குதல் இனிது. கையில் நிற்கக்கூடிய பொருளைப் பெறுவதாக இருந்தாலும் கல்லாதவரை விடுதல் இனிது. இந்த உலகம் நிலையானது என்போரின் நட்பினைக் கை விடுதல் இனியது.
பாடல்: 26 (நச்சி...)

    நச்சித் தற் சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே;
    உட்கு இல்வழி, வாழா ஊக்கம் மிக இனிதே;
    எத் திறத்தானும் இயைவ கரவாத
    பற்றினில் பாங்கு இனியது இல். 26


நசை - விருப்பம் பாங்கு - அன்பு

ஒரு பொருளை விரும்பித் தன்னை அடைந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுதல் இனிது. மதிப்பு இல்லாதவிடத்து வாழாதவனின் மனவெழுச்சி இனிது. எப்படியானாலும் பிறருக்குக் கொடுக்கும் பொருளை மறைக்காதவனின் அன்பு மிகப்பெரியது.
பாடல்: 27 (தானம்...)

    தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே;
    மானம் பட வரின் வாழாமை முன் இனிதே;
    ஊனம் கொண்டாடார், உறுதி உடையவை
    கோள் முறையால் கோடல் இனிது. 27


ஆண்மை - பெருமை

அபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் இழந்து வாழாமை இனிது. குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.
பாடல்: 28 (ஆற்றானை...)

    ஆற்றானை, 'ஆற்று' என்று அலையாமை முன் இனிதே;
    கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே;
    ஆக்கம் அழியினும், அல்லவை கூறாத
    தேர்ச்சியில் தேர்வு இனியது இல். 28


ஆற்றானை - செய்யமாட்டாதவனை கூற்றம் - எமன்

ஒரு வேலையைச் செய்யத் தெரியாதவனிடத்து ஒரு வேலையைக் கொடுக்காமை இனிது. எமனின் வருகையை எதிர்பார்த்து வாழ்வது இனிது. செல்வம் இழந்தாலும் பாவச் சொற்களைக் கூறாதிருப்பது எல்லாவற்றையும் விட இனியது.
பாடல்: 29 (கயவரை...)

    கயவரைக் கை இகந்து வாழ்தல் இனிதே;
    உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே;
    'எளியர், இவர்!' என்று இகழ்ந்து உரையாராகி,
    ஒளி பட வாழ்தல் இனிது. 29


கயவரை - கீழ்மக்களை இகழ்ந்து - அவமதித்து

கீழ் மக்களை நீக்கி வாழ்தல் இனியது. தன் உயர்வினை நினைத்து ஊக்கத்துடன் வாழ்தல் இனிது. வறியவர் என்று இகழாது புகழ்பட வாழ்தல் இனிதாகும்.
பாடல்: 30 (நன்றி...)

    நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே;
    மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;
    'அன்று அறிவார் யார்?' என்று அடைக்கலம் வெளவாத
    நன்றியின், நன்கு இனியது இல். 30


மாண்பு - மாட்சிமை வௌவாத - அபகரியாத

ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.
பாடல்: 31 (அடைந்தார்...)

    அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே;
    கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே;
    சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும், ஆராய்ந்து
    அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது. 31


கூரா - துன்பம்

தம்மை அடைக்கலமாக வந்தவன் துன்பத்தை நீக்குவது இனிது. கடன் வாங்கியாவது செய்ய வேண்டியவற்றைச் செய்வது இனிது. மிகச் சிறந்த நுட்பமான அறிவுடையவர்களாக இருந்தாலும் ஒரு பொருளை ஆராய்ந்து உரைப்பது இனிது ஆகும்.
பாடல்: 32 (கற்றறிந்தார்...)

    கற்று அறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே;
    பற்று அமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே;
    தெற்றெனவு இன்றித் தெளிந்தாரைத் தீங்கு ஊக்காப்
    பத்திமையின் பாங்கு இனியது இல். 32


தெற்றனவு - ஆராய்ந்து

கற்று அறிந்தவர்கள் உறும் கருமப் பயன் இனிதாகும். அன்பில்லாத அரசனின் கீழ் வாழாதிருத்தல் இனிதாகும். ஆராயாமல் கெடுதல் செய்தவர்களுக்கு தீங்கு செய்யாமல் அன்புடையவராக இருத்தலைப் போன்று இனியது வேறு இல்லை.
பாடல்: 33 (ஊர்முனியா...)

    ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே;
    தானே மடிந்து இராத் தாளாண்மை முன் இனிதே;
    வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர்
    தானை தடுத்தல் இனிது. 33


தாள் - முயற்சி

ஊர் வெறுக்காதவற்றைச் செய்து வருபவனின் ஊக்கம் இனிதாகும். சோம்பல் இல்லாது முயற்சி உடையவனின் ஆண்மை இனிதாகும். வாள் கலக்குகின்ற போரில் மாறாத பெருமை உடைய அரசர்களின் படைகளை எதிர்த்தல் ஓர் அரசனுக்கு இனிதாகும்.
பாடல்: 34 (எல்லிப்...)

    எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே;
    சொல்லுங்கால் சோர்வு இன்றிச் சொல்லுதல் மாண்பு இனிதே;
    புல்லிக் கொளினும் பொருள் அல்லார் தம் கேண்மை
    கொள்ளா விடுதல் இனிது. 34


கேண்மை - நட்பு சோர்வு - மந்தி

இரவில் செல்லாமல் இருப்பது இனியது. சொல்லும் இடத்து மறதியின்று சொல்லுதல் இனிதாகும். தானாக வலிய வந்து நட்புக் கொள்ளும் கயவர்களின் நட்பினைக் கைவிடுதல் இனிதாகும்.
பாடல்: 35 (ஒற்றினான்...)

    ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் மாண்பு இனிதே;
    முன்தான் தெரிந்து முறை செய்தல் முன் இனிதே;
    பற்று இலனாய்ப் பல்லுயிர்க்கும் பார்த்து உற்றுப் பாங்கு அறிதல்
    வெற்றி வேல் வேந்தர்க்கு இனிது. 35


ஒற்று - வேவு உற்று - சமமாக

வெற்றியைத் தருகின்ற பெருமை உடைய அரசன் ஒற்றன் கூறியவற்றை, வேறு ஒற்றராலே ஆராய்ந்து பார்ப்பது இனிது. ஆராய்ந்து பார்த்து நீதி வழங்குதல் இனிதாகும். எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்து முறை செய்தல் இனிதாகும்.
பாடல்: 36 (அவ்வித்து...)

    அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே;
    செவ்வியனாய்ச் செற்றுச் சினம் கடிந்து வாழ்வு இனிதே;
    கவ்வித் தாம் கொண்டு, தாம் கண்டது காமுற்று,
    வவ்வார் விடுதல் இனிது. 36


அழுக்காறு - பொறாமை

மனக்கேடான பொறாமைச் சொற்களைச் சொல்லாமை இனிதாகும். மனக்கேடு இல்லாமல் சினத்தை விடுத்து வாழ்வது இனிதாகும். தனக்கு வேண்டிய பொருளை அபகரிக்காமல் அதனை மறந்து விடுதல் இனிது.
பாடல்: 37 (இளமையை...)

    இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே;
    கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே;
    தட மென் பணைத் தோள் தளிர் இயலாரை
    விடம் என்று உணர்தல் இனிது. 37


கிளைஞர் - சுற்றத்தார் பணை - மூங்கில்

தனக்குள்ள இளமைப் பருவத்தை மூப்பென்று உணர்தல் இனிது. சுற்றத்தாரிடம் இனிய சொற்களைக் கேட்பது இனிதாகும். மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும் உடைய மகளிரை விஷம் என்று உணர்தல் இனிது.
பாடல்: 38 (சிற்றாள்...)

    சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே;
    நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே;
    எத்துணையும் ஆற்ற இனிது என்ப, பால் படும்
    கற்றா உடையான் விருந்து. 38


நட்டார் - நண்பர்கள் ஆ - பசு

ஆயுதங்களைக் கொண்ட இளம் வீரர்கள் படை இனிது. சுற்றத்தை உடையவனின் பகையை அழிக்கும் தன்மை இனிது. கன்றோடு பொருந்திய பசுவுடையவனது விருந்து எல்லா வகையினும் இனியது.
பாடல்: 39 (பிச்சைபுக்குண்பான்...)

    பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே;
    துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே;
    உற்ற பொலிசை கருதி, அறன் ஒரூஉம்
    ஒற்கம் இலாமை இனிது. 39


பிளிற்றாமை - கோபம்கொள்ளாமை ஒற்கம் - மனத்தளர்ச்சி

பிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் இனிது. துன்பத்தில் இருந்தாலும் துன்பம் கூறாது இருப்பவனின் பெருமை இனிது. மிக்க பேராசையைக் கொண்டு அறவழியிலிருந்து நீங்காதிருக்கும் உறுதி இனிது.
பாடல்: 40 (பத்து...)

    பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு இனிதே;
    வித்துக் குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே;
    பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய
    கற்றலின் காழ் இனியது இல். 40


வித்து - விதை

பத்துப் பொருள் கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் இனிது. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை.



பூதஞ்சேந்தனார்

நாற்பது வெண்பாக்கள் கொண்ட நூல்; நல்லவை இவை இவை என்று எடுத்துரைக்கின்றன. ஆகையால் இந்நூலுக்கு இனியவை நாற்பது என்று பெயர். இன்று 41 வெண்பாக்கள் இருக்கின்றன. முதற்பாட்டு கடவுள் வாழ்த்து. சிவன், திருமால், நான்முகன் மூவரையும் வாழ்த்துகின்றது. இவ்வாழ்த்து பிற்காலத்தாரால் பாடிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்நூலைச் செய்த ஆசிரியர் பெயர் பூதஞ்சேந்தனார். இவர் இயற்பெயர் சேந்தனார்; இவர் தந்தை பெயர் பூதனார்; இந்தப் பூதனார் மதுரையில் வாழ்ந்தவர். இவர் தமிழ் ஆசிரியர். ஆதலால் இந் நூலாசிரியரை மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் என்று அழைத்தனர்.

இந்நூல் வெண்பாக்கள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பெற்று வாழ்வதற்கான நல்லறங்களைக் கூறுகின்றன. பெரும்பாலான வெண்பாக்களில் மூன்று செய்திகள்தாம் சொல்லப்படுகின்றன. சில சிறந்த நீதிகள் இதில் உண்டு. இவ்வெண்பாக்கள் அவ்வளவு கடினமானவையல்ல. எளிதில் பொருள் தெரிந்து கொள்ளக்கூடியவை. மோனையும், எதுகையும் அமைந்த அழகிய வெண்பாக்கள், சில பஃறொடை வெண்பாக்களும் இதில் உண்டு.

Saturday 18 February 2012

கவியரசு கண்ணதாசன் எண்ணங்கள் ஆயிரம்


வெற்றி பெற்றவனுக்கு எதுவும் சர்வ சாதாரணமாகத் தெரிகிறது! தோல்வியுற்றவனுக்கு எதைக் கண்டாலும் பயம் வருகிறது.

வென்றவனுக்கு மலையும் கடுகு; தோற்றவனுக்கு கடுகும் மலை.

அவன் மலையோடு மோதிச் சாகிறான், இவன் கடுகைக் கண்டு பயந்துச் சாகிறான்.

வெற்றி மயங்க வைத்துத் தோல்வியை இழுத்து வருகிறது; தோல்வி அடக்கத்தைத் தந்து வெற்றியைக் கொண்டு வருகிறது.


தோற்றவர்களையும் நான் மரியாதையாகத்தான் பார்ப்பேன்; காரணம் அவர்களுக்கும் ஒரு காலம் வரும். வென்றவர்களை பரிதாபமாகப் பார்ப்பேன்; ' இவர்கள் எப்போது அடிவாங்கப் போகிறார்களோ?' என்று. வெற்றி மயக்கம், தோல்வி கலக்கம் இரண்டுமற்ற நிலையினை மேற்கொண்டு விட்டவனுக்கு உணர்ச்சி ஒன்றுதான். அது சந்தோஷமும் அல்ல. துக்கமும் அல்ல. அது நிரந்தர நிலை; அதற்கு அழிவு கிடையாது.

பாபுவின் தூண்டிலில் இன்று நிறைய மீன் கிடைத்தால், நாளை ராமுவின் தூண்டிலில் அதிக மீன் கிடைக்கும்.

வருவது போவதற்காக; போவது வருவதற்காக; பிறப்பது இறப்பதற்காக; இறப்பது பிறப்பதற்காக; அழிவது மீள்வதற்காக; மீள்வது அழிவதற்காக. விதைப்பது அறுப்பதற்காக; அறுப்பது விதைப்பதற்காக.

கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று கொக்கு கவலைப்படக் கூடாது! மீண்டும் மழைக் காலம் வருகிறது.

மழைக் காலம் வந்து விட்டதென்று நதி குதிக்க கூடாது, அதோ வெயில் காலம் வந்துக் கொண்டிருக்கிறது.

சூரியன் கொதிக்கும் போது தூக்கிப் பிடித்தக் குடையை இருட்டிவிட்ட பின்பு கூட மடக்காதவன் மடையன்.

இருட்டிய போது ஏற்றி வைத்த விளக்கை, விடிந்து விட்ட பிறகும் அணைக்காதவன் மடையன்.

குடைராட்டினத்தில் மேலே போகும்போது பலக் காட்சிகள் தெரியும்; கீழே இறங்கும் போது சுற்றி நிற்கும் ஜனங்கள்தான் தெரிவார்கள்.

புது வெள்ளம் வரும்போது குழந்தைக்கு உற்சாகம் அதிகம்; அதிலே குளித்தால் ஜலதோஷம் பிடிக்கும்.

புது வெற்றியில் தலைக்கனம் அதிகமாகும்; அது அதிகமானால் அடுத்தாற்ப்போல் காத்து நிற்பது அவமானம்.

தேரில் உட்கார்ந்திருப்பவன் குதிரையை மட்டும் கவனித்தால் போதாது. பாதையையும் கவனித்தாக வேண்டும்.

'நான்' என்று நினைக்காதீர்கள்; நினைத்தால் இறைவன் 'தான்' என்பதைக் காட்டி விடுவான்.



ஆகவே எந்த துறையில் உள்ளவர்களுக்கும் சொல்லுவேன்.

தோல்வி அடைந்தவர்களை பழி வாங்காதீர்கள். அன்போடு நடத்துங்கள்.

காலை வெயிலில் உங்கள் நிழல் பின்  பக்கமாக விழுந்தால் மாலை வெயிலில் முன் பக்கமாகத்தான் விழும்.
==================================================================================
கவியரசு கண்ணதாசன் எண்ணங்கள் ஆயிரம் என்ற நூலிலிருந்து

Wednesday 18 January 2012

மயிலாப்பூர் (பழமையான) கபாலீச்சுவரர் கோயில் பற்றிய குறிப்பு :

 நன்றி: சைவம் .அர்ஜு

மயிலாப்பூர் (பழமையான) கபாலீச்சுவரர் கோயில் பற்றிய குறிப்பு :

  • பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. "கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே" என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.
  • கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டிக்கொண்டார்கள். கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.
  • Santhome Cathedral சுமார் 1910ல் பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவை அரசாங்கத்தினரால் 215 - 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், "Found on stone excavated below the Cathedral at Santhome" என்பன போன்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன.
  • இப்போதுள்ள ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. இதற்கு முன்னிருந்த திருக்கோயில் கடற்கரையில் அமைந்திருந்தது. ("ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை", "மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்" - சம்பந்தர், "கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே" - திருப்புகழ்). பழைய திருக்கோயில் ஐரோப்பியர்களால் இடிக்கப்பட்டு, பள்ளிகளும், சர்ச்ம், கோட்டைகளும் அமைத்துக் கொண்டார்கள். அவ்விடத்தில் தற்போது சாந்தோம் சர்ச் உள்ளது.
  • இடித்த பழைய கோயிலின் கற்களைக்கொண்டு புதுக்கோயில் தற்போது இருக்கும் இடத்தில் கட்டப்பட்டது. அப்போது கல்வெட்டுக்களின் அருமையை உணராது அவைகளைத் தாறுமாறாக இணைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட கல்வெட்டுக்கள் அம்மன் கோயிலில் ஐம்பது வரை இருக்கின்றன. சுவாமி கோயிலில் கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை.
  • அலங்கார மண்டபத்து முன்வாசல் தளத்தில் டச்சு எழுத்துக்கள் கொண்ட சில கற்கள் உள்ளன. பழுது பார்த்தபோது எடுத்த கற்களில் சில கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகள் 1923-ம் ஆண்டு 215 முதல் 223 வரை எண்களாக அரசியார் பிரதி எடுத்திருக்கிறார்கள். அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய "திருமகள்போல" என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.
  • இக்கல்வெட்டுக்கள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம்.
  • சிவநேசர் திருமயிலை கடற்கரையில் இருந்ததுமன்றி, கடலில் தோணியிலிருந்தே சரக்கு எடுக்கும் வண்ணமாக சரக்கறை கட்டியிருக்க வேண்டும் என்றும், அதற்குப் பின்புறம் அவர் குடியிருக்க வசதி இருந்திருக்க வேண்டும் என்றும் அறியக் கிடக்கின்றது.
  • ஈழ நாட்டுத் திருக்கோணமலை, துளுவ நாட்டுக் கோவை (Gova) முதலிய இடங்களில் பரங்கியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் செய்த வண்ணமே இம்மயிலையிலும் பரங்கியர்கள் கோயிலையும், மனைகளையும் இடித்துப் பள்ளியும் கோட்டையும் கட்டியிருக்கக் கூடும் என்பது திண்ணம்.

மயிலாப்பூர் பற்றிய சரித்திரக் குறிப்புகள் :

  • H.D. Love என்பவர் எழுதிய சென்னைச் சரித்திரத்தில் 1516 முதல் போர்த்துக்கீசியர், துருக்க மூர்கள் பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் முதலியவர்கள் அடிக்கடி மாறிமாறி இவ்வூரைப் பிடித்துத் தம் வசப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என அறியலாம். அந்நூலின்படி (Volume - I பக்கம் 321 - 322) பிரெஞ்சுக்காரருக்கும் துருக்கருக்கும் 1672-ல் ஒரு போர் நடந்தது. அப்போது பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி கபாலீஸுவரர் சன்னிதியில் ஒளிந்து கொண்டதாம். ஆகவே, தற்கால கபாலீசுவரம் 1672லேயே இருந்தது எனலாம்.
  • 1798-ல் எழுதப்பட்ட சென்னை நகரப் (Map of Chennai) படத்தில் மயிலைத் திருக்குளம் காட்டப்பட்டிருக்கிறது.

  • "துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொல்மயிலை...." என்று ஆரூரர் திருவாய் மலர்வதுபோல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் டாலமி (Ptolemy) என்ற கிரேக்க ஆசிரியர் இயற்றிய பூகோள நூலில் Malliarpha எனப்படுவதே மயிலாப்பூர் என்று Vestiges of Old Madras Vol. - I chapter 23-ல் ஆசிரியர் H.D. Love கூறுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் வாழ்ந்தது மயிலையிலே. அவர் நண்பர் ஏலேல சிங்கர் கப்பல் வர்த்தகம் செய்ததும் இவ்விடத்தில்தான்.
  • 11-வது நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்றில் (256 / 1912) மயிலார்ப்பில் பல நானாதேசிகள் கூடிச் சில தீர்மானங்கள் செய்தனர் என்று காணப்படுகிறது.
  • துறைமுகப் பட்டினமாகிய ஒரு வியாபாரத் தலத்தில்தான், பல தேசத்து மக்கள் கூடுவர். எனவே, டாலமி காலம் முதல் கல்வெட்டுக் காலம் வரையில் மயிலாப்பூர் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது. போர்த்துக்கீசியர் காலத்திலும் இத்துறைமுகம் சிறந்து விளங்கியுள்ளது. இத்துறைமுகத்திற்கும், ஆங்கிலேயர் துறைமுகமாகிய சென்னையின் வடபாதிக்கும் ஓயாமல் வியாபாரப் போட்டியும், கடும்போரும் இருந்து வந்த செய்தி Vestiges of Old Madras Vol. - I என்ற நூலில் நன்கு விளங்கும்.
  • சங்க பல்லவன் கம்பவர்மன் காலத்திய கல்வெட்டொன்று (189/1912) மயிலாப்பூரில் அரச குடும்பத்தினர் வசித்ததைக் குறிக்கின்றது.
  • மயிலை வாசிகளாயிருந்த பல வியாபாரிகள் வேறு பல தலங்களைத் தரிசித்தபோது சந்தி விளக்கு, நந்தா விளக்குகட்குத் தானம் செய்த வரலாறுகள், பல கல்வெட்டுக்களால் அறியப்படுவதிலிருந்து, அவர்கள் சென்ற இடங்களிலெல்லம் தானம் செய்யக்கூடிய செல்வமும், புண்ணியமும் பெற்றிருந்தனர் என்பது புலனாகும்.
  • திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது. திருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் "வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே" என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது. "மங்குன் மதி மாடவீதி மயிலாப்பிலுள்ளார்" (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார். "மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும்" (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில் மயிலார்ப்பில் என்று "ரகர" ஒற்றுடன் காணப்படுகிறது(256/1912). டாலமியும் மல்லிஆர்பா என்பதில் "ரகர" ஒற்றுடன் கூறுகிறார்.

Sunday 15 January 2012

வரிகள் - பா.விஜய்
படம் - ஆட்டோ கிராப் 2004

இயக்கம்  : சேரன்
இசை : பரத்வாஜ்





ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!

மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ நீ மோதிவிடு!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!


மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!

Monday 7 November 2011

நாட்டின் வளர்ச்சிக்கு தேவை கூடங்குளம் அணுமின் நிலையம்

நன்றி: தினமலர்



கட்டுரை  ஆசிரியர்: பாரத ரத்னா முனைவர் . அப்துல் கலாம் ( முன்னால் இந்திய ஜனாதிபதி மற்றும் இந்திய ஏவுகணைத் தொழில்நுட்பப் தந்தை)






உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாடு எல்லாத் துறைகளிலும் ஒரு படிக்கு மேல் இருக்க வேண்டும் என்பது தான் நம் ஒவ்வொருவரின் தீராத ஆவல், விருப்பம், எதிர்பார்ப்பு எல்லாம். எல்லோரது ஒத்துழைப்பும் இருந்தால் தான் இது போன்ற சாதனைகளைப் படைக்க முடியும்.
தகவல் தொழில் நுட்பத்தில் அமெரிக்காவையே அசைத்துப் பார்க்கும் நாம், அத்தொழில் நுட்பம் மேலும், தங்கு தடையின்றி தொடர, மின்சாரத் தேவையும் அவசியம் என்பதை உணர வேண்டும். மின் உற்பத்திக்கு தேவைப்படும் பொருட்கள் பற்றாக் குறையாக உள்ள இக்காலகட்டத்தில், அணுசக்தி மூலம் இதனை சரிக்கட்ட முடியும் என்பது விஞ்ஞானிகளின் கூற்று. நல்ல வேளையாக, தமிழகத்தில், கூடங்குளத்தில் அமையவுள்ள அணுமின் நிலையம் மூலம், நமது மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்து கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதனை, நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அணுசக்தி என்றாலே ஏதோ ஒருவித பயம் பலரிடம் குடிகொண்டுள்ளது. ஆனால், எதிர் நீச்சல் போட்டால்தான் வாழ்க்கையில் முன்னேறமுடியும் என்பதை நம்பும் நாம், அதே துணிச்சலுடன் புதிய முயற்சிகளையும் வரவேற்க வேண்டும். பாதுகாப்பான அணு மின் நிலையங்களால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று பலரும் கூறியுள்ள நிலையில், உண்மை, நேர்மை, தூய்மை ஆகியவற்றின் வடிவமான நம் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் இதனையே வலியுறுத்தியுள்ளார். அணுமின் நிலையம் மற்றும் அதுதொடர்பாக அவரது கருத்துக்கள் இதோ....

தமிழகத்திலே உள்ள கூடங்குளத்தில் அமைந்துள்ள 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டி, அணுஉலை செயல்பட தயாராகிக்கொண்டு இருக்கும் நிலையில் அணுசக்தியைப்பற்றியும், அதன் விளைவுகளைப்பற்றியும் நாட்டில் சில விவாதம் நடந்து வரும் இவ்வேளையில், சில உண்மைகளையும், அணுசக்தியின்
நன்மைகளைப் பற்றியும், இயற்கைச்சீற்றங்களினால் அதற்கு ஏற்படும் விளைவுகளைப்பற்றியும், அணுஉலைகளின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு போன்ற விஷயங்களை அறிவார்ந்த முறையில் அணுகி, அதைப் பற்றி ஒரு தெளிவான கருத்தை என் அனுபவத்தோடு, உலக அனுபவத்துடன் ஆராய்ந்து அதை நம் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திருநெல்வேலி மாவட்டத்து மக்கள் அறிவார்ந்த மக்கள், அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கேயே படித்து, அங்கிருந்து மட்டுமல்லாமல் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தங்களது அறிவாற்றலால் அனைத்து மக்களையும், நாட்டையும் வளப்படுத்தும் மக்கள் தான் திருநெல்வேலியை சேர்ந்த மக்கள். அதைப்போலவே தமிழகம் இன்றைக்கு ஒரு அறிவார்ந்த நிலையில் வளர்ந்து, மாநிலத்தை வளப்படுத்தி, நாட்டை வளப்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக பல்வேறு திறமைகளில் சிறப்பான மாநிலமாக தமிழகம் திகழ வேண்டிய வளர்ச்சிப்பாதையில் உள்ளது. அப்படிப்பட்ட தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற ஏதுவான சூழ்நிலை நிலவுகிறது.

அதற்கு முக்கிய அவசியமான கட்டமைப்பு என்ன? அதுதான் மின்சாரம், மின்சாரம், மின்சாரம். எப்படிப்பட்ட மின்சாரம், மக்களை பாதிக்காத, ஆபத்தில்லாத அணுமின்சார உற்பத்திதான் அதன் முக்கிய லட்சியம். இந்தியாவிலேயே ஒரே இடத்திலே 2000 மெகாவாட் மின்உற்பத்தி, இன்னும் சில ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி அணுமின்சாரம் மூலம் நடைபெற இருக்கிறது என்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய செய்தி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒரு அரும் பெரும் செய்தி, இந்தியாவில் இது முதன் முறையாக நடைபெற இருக்கிறது.கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய் முதலீடு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. அது உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீத மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்க இருக்கிறது. எனவே வளமான திருநெல்வேலி மாவட்டம், வளமான கூடங்குளம் பகுதி, வலிமையான தமிழகத்தை நாம் அடையவேண்டும். அப்படிப்பட்ட லட்சியத்தை நோக்கி நாம் செல்லும் போது, ஜனநாயக நாட்டில் அணுசக்தி மின்சார உற்பத்தி பற்றி இயற்கையாக பலகருத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதாவது அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு உருவாகியுள்ள எதிர்ப்பை மூன்று விதமாக பார்க்கலாம். ஒன்று கூடங்குளம் பகுதியில் வாழும் மக்களுக்கே ஏற்பட்டுள்ள உண்மையான கேள்விகள், இரண்டாவது பூகோள - அரசியல் சக்திகளின் வர்த்தகப் போட்டிகளின் காரணமாக விளைந்த விளைவு (Dynamics of Geo&political and Market forces),, நாமல்ல நாடுதான் நம்மை விட முக்கியம் என்ற ஒரு அரிய கருத்தை அறிய முடியாதவர்களின் தாக்கம். முதலாவதாக மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது நியாயமான சந்தேகங்களை வகைப்படுத்தி, அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம்.

மக்களின் மற்றும் மக்களின் கருத்தால் எதிரொலிக்கும் கேள்விகளை தெளிவாக்கி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது இரண்டாவது முக்கியம். இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பாத, வளர்ச்சியை பிடிக்காதவர்களின் முயற்சியை பற்றியும், அவர்களின் அவதூறு பிரசாரங்களைப்பற்றியும் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எனவே முதலில் மக்களின் கேள்விகள் என்ன? அவர்களின் நியாயமான பயம் என்ன? என்பதை பார்ப் போம்.
1.ஜப்பான் புகுஸிமா அணுஉலை எரிபொருள் சேமிப்பு கிடங்கில் சுனாமியால் கடல் நீர் சென்றதால், ஏற்பட்ட மின்சார தடையால் நிகழ்ந்த விபத்தை தொலைக்காட்சியில் பார்த்த மக்களுக்கு நியாய மாக ஏற்பட்ட பயம் தான் முதல் காரணம்.
2.இயற்கை சீற்றங்களினால் அணு உலை விபத்து ஏற்பட்டால், அதனால் கதிரியக்க வீச்சு ஏற்பட்டால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் தைராய்டு கோளாறுகள், நுரையீரல் புற்று நோய், மலட்டுத்தன்மை போன்றவை வரும் என்று மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
3.அணுசக்தி கழிவுகளை சேமித்து வைப்பது ஆபத்து, அணுசக்தி கழிவுகளை கடலில் கலக்கப்போகிறார்கள், அணுசக்தியால் உருவாகும் வெப்பத்தினால் உருவாகும் நீராவியினாலும், அணுசக்தி கழிவை குளிர்விக்க பயன் படும் நீரை மீண்டும் கடலில் கலந்தால் அதனால் மீன் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும். 500 மீட்டருக்கு மீன் பிடித்தலுக்கு தடை விதிக்கப்படும், அதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், என்ற பயம் நிலவுகிறது.
4.அணு உலையில் எரிபொருள் மாதிரியை இரவில் நிரப்பும் பொழுது வழக்கமாக ஏற்படும் சத்தத்தால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு விட்டது.
5.அணு உலையில் இயற்கைச் சீற்றத்தாலோ, கசிவாலோ விபத்து ஏற்பட்டால், உடனடியாக அப்பகுதி மக்கள், 90 கிலோ மீட்டர் தூரம் 2 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்
படவேண்டும் என்று சொல்கிறார்கள், சோதனை ஓட்டம் செய்து பார்க்கும் போது மக்களை உடனடியாக வெளியேற சொன்னதனால் மக்களுக்கு பயம் ஏற்பட்டு விட்டது. ஒருவேளை விபத்து நேர்ந்தால், சரியான சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் , மக்கள் கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டால் தப்புவதற்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை, மக்கள் எப்படி தப்ப முடியும்.
6.10,000 பேருக்கு வேலை வாய்ப்பு செய்து தரப்படும் என்று கூறினார்கள், ஆனால் அந்த பகுதியை சேர்ந்த 35 பேருக்குத்தான் வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது, ஏன் வேலை வாய்ப்பை அளிக்கவில்லை
7.பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வரும் என்று சொன்னார்கள், கடல் நீரை சுத்திகரித்து நல்ல தண்ணீர் கிடைக்கும் என்று சொன்னார்கள், இரண்டும் கிடைக்கவில்லை.

இது போன்று பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளன, சரியான கேள்விகளும் உண்டு, மிகைப்படுத்தப்பட்ட கேள்விகளும் உண்டு ஆனால் இந்த கேள்விகளுக்கு சரியான பதிலை தரவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. மக்களின் மனதில் பய உணர்வை ஏற்படுத்திவிட்டு எவ்வித விஞ்ஞான முன்னேற்றத்தையும் மக்களுக்கான முன்னேற்றத்திற்கான வழியாக ஏறெடுத்துச்செல்ல முடியாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.அணுசக்தி துறையோடு எனக்கு இருந்த 20 வருட அனுபவத்தின் காரணமாகவும், அணுசக்தி விஞ்ஞானிகளோடு எனக்கு இருந்த நெருக்கமான தொடர்பாலும், சமீப காலங்களில் இந்தியாவிலும், அமெ ரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் அணுசக்தி, துறையை சேர்ந்த ஆராய்ச்சி நிலையங்களுக்கு சென்று அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகளுடனும், தொழில் நுட்ப வல்லுனர்களுடனும் கலந்துரையாடிய அனுபவத்தாலும், கடந்த 4 வருடங்களாக இந்திய கடற்கரை ஓரம் அமைந்துள்ள எல்லா அணுதி உற்பத்தி நிலையங்களுக்கும் சென்று, அந்த அணுசக்தி நிலையங்களின் உற்பத்தி செயல் திறனை பற்றியும் அதன் பாதுகாப்பு அம்சங்களை பற்றியும் மிகவும் விரிவாக ஆராய்ந்துள்ளேன்.

அதுமட்டுமல்ல கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் பார்வையிட்டு அதன் பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் பல்வேறு காரணிகளைப்பற்றியும் அதாவது கடலோரத்தில் உள்ள இந்திய அணுமின் சக்தி நிலையங்களுக்கும் மற்ற நாடுகளில் உள்ள அணுமின் நிலையங்களுக்கும் என்ன வித்தியாசம், அதன் ஸ்திர தன்மை, பாதுகாப்பு தன்மை பற்றியும், இயற்கை பேரிடர் மற்றும் மனித தவறின் மூலம் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதை எப்படி சரி செய்ய முடியும் அதன் தாக்கத்தை சமன் செய்ய செய்யப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் பற்றியும், செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளேன். அத்துடன் என்னுடைய இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணத்தின் போதும், ஆராய்ச்சி நிலையங்களிலும், கல்வி போதிக்கும் என்னுடைய பணி மூலமாகவும் செய்த ஆராய்ச்சிகளின் விளைவாக வும், அணுசக்தியைப்பற்றியும், எரிசக்தி சுதந்திரத்தைப்பற்றிய அறிவியல் சார்ந்த விளக்கங்களையும் ஆராய்ச்சி விளக்கங்களை விரிவாக விவாதித்தோம். அதன் விளைவாக நான் எனது நண்பர் தி. பொன்ராஜ் அவர்களுடன் சேர்ந்து இந்தியா

2030க்குள் எரிசக்தி சுதந்திரம் பெற எந்த அளவிற்கு அணுசக்தி முக்கியம் என்பதை பல மாதங்கள், தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்ததன் பயனாக இந்த ஆராய்ச்சி கட்டுரையை ஆய்வின் முடிவுகளின் விளக்கத்தை மக்களுக்கு தெரிவிக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த ஆய்வின் முடிவுகளையும், என்னுடைய கருத்தையும் பார்ப்பதற்கு முன்பாக உங்களுடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அதாவது, கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. காட்டாற்று வெள்ளமென வரும் அகண்ட காவிரியை தடுத்து நிறுத்த அந்தக்காலத்து தொழில் நுட்பத்தை பயன் படுத்தி முதல் நூற்றாண்டில் (1Century AD) கல்லணை கட்டினானே கரிகாலன். எப்படி முடிந்தது அவனால், வெள்ளமென வரும் காவிரியால் கல்லணையை உடைந்து மக்களின் பேரழிவுக்கு காரணமாகிவிடும் என்று நினைத்திருந்தாலோ, பூகம்பத்தால் அணை உடைந்து விடும் என்று கரிகாலன் நினைத்திருந்தாலோ கல்லணை கட்டியிருக்க முடியாது. ஆயிரம் ஆண்டுகளாகியும் நம் கண்முன்னே சாட்சியாக இருக்கிறதே ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில். சுனாமியினால் கடல் கொண்டு அழிந்த பூம்புகார் போன்று, பூகம்பத்தின் காரணமாக, பெரிய கோவில் அழிந்து விடும் என்று நினைத்திருந்தால், தமிழர்களின் மாபெரும் கட்டிட கலையை உலகிற்கே பறைசாற்றும் விதமாக, எடுத்துக்காட்டாக இருக்கும் பெரிய கோவில் நமக்கு கிடைத்திருக்குமா.ஹோமி பாபா முடியாது என்று நினைத்திருந்தால், கதிரியக்கம் மக்களைப் பாதித்திருக்கும் என்று நினைத்திருந்தால், இன்றைக்கு 40 ஆண்டுகளாக பாதுகாப்பான அணுமின்சாரத்தை 4700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்க முடியாது, மருத்துவத்துறையிலே கேன்சர் நோயால் அவதிப்படும் மக்களுக்கு ஹீமோதெரெபி அளித்திருக்க முடியாது, விவசாயத்தின் விளைபொருளின் உற்பத்தியை பெருக்கி இருக்க முடியாது. உலக நாடுகளே இந்தியாவை மதிக்கும் வண்ணம் அணுசக்தி கொண்ட ஒரு வலிமையான நாடாக மாற்றியிருக்க முடியாது. எனவே முடியாது என்று நினைத்திருந்தால், ஆபத்து என்று பயந்திருந்தால் எதுவும் சாத்தியப்பட்டிருக்காது.

ஏன் கதிரியக்கத்தை முதன் முதலாக பிட்ச் பிளன்ட் (two uranium minerals, pitchblende and torbernite (also known as chalcolite).) என்ற உலோகத்தை தன் தலையில் சுமந்து அதை பற்றி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தாரே மேடம் மேரி க்யூரி. தனக்கே ஆபத்து அதனால் வரும் என்று தெரிந்தும் ஆராய்ச்சியின் நல்ல பயன் உலகத்திற்கு செல்ல வேண்டும் என்று, தொடர்ந்து ஆராய்ச்சி செய்து முதன் முதலாக கதிர்வீச்சிற்கு வேதியலிலும், கதிர்இயக்கத்திற்கு இயற்பியலிலும் 2 நோபல் பரிசைப்பெற்று, அந்த கதிரியக்கத்தாலேயே தன் இன்னுயிரை இழந்தாரே. அதுவல்லவா தியாகம்.

தன்னுயிரை இழந்து மண்ணுயிரை காத்த அன்னையல்லவா மேடம் க்யூரி. இன்றைக்கு அந்த கதிரியக்கத்தால் எத்தனை கேன்சர் நோயாளிகள் ஹீமோதெரபி மூலம் குணப்படுத்தப்படுகிறார்கள், விவசாயத்திற்கு தேவையான விதைகளை கதிரியக்கத்தினை பயன்படுத்தி அதன் விளைச்சலை அதிகரிக்க முடிகிறதே. இன்றைக்கு அணுசக்தியினால் உலகம் முழுதும் 4 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறதே. அதே போல் அணுசக்தியில் யாருக்கும் நாம் சளைத்தவர்கள் இல்லை என்று சாதித்து காட்டினோமே, அந்த வழியில் நண்பர்களே முடியாது என்று எதுவும் இல்லை.

முடியாது, ஆபத்து, பயம் என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட இயலாதவர்களின் கூட்டத்தால், உபதேசத்தால் வரலாறு படைக்கப்பட வில்லை. வெறும் கூட்டத்தால் மாற்றத்தை கொண்டுவர முடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது, மாற்றம் இந்த உலகிலே வந்திருக்கிறது. இந்தியா வல்லரசாகும் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது, வல்லரசு என்ற சித்தாந்தம் என்றோ போய்விட்டது. 2020க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பது தான் நம் மக்களின் லட்சியம்.



Friday 28 October 2011

பைத்தியமாக்கப்பட்ட ஒரு அப்பாவி இந்தியன்

நன்றி: http://gomathichetty.wordpress.com/2011/10/28/mad-innocent-indian-commi/




தமிழினத்தையே அழிக்க கூடிய கூடம் குளம் அணு உலையை தடுக்க கோரி மன்மோகனிடம் மனு கொடுக்க சென்றேன்.   அதிஷ்டவசமாக எனக்கு அனுமதியும் கிடைத்தது. ஏற்கனவே தோழர்கள் புத்தகம் அதிகம் படித்ததன் காரணமாக பேசுவது ஒன்றும் பெரிதான விசயம் அல்ல. என்னுடைய பேச்சை கேட்டு ஆச்சரியம் அடைந்த மன்மோகன் சிங், அணு உலையில் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளதா என்று ஆச்சரியப்பட்டு, உடனடியாக அந்த திட்டத்தை நிறுத்துவதாகவும் அதற்கு முன் வேறு முறையில் எரிசக்தி உருவாக்கும் முயற்சியை பற்றிய ஒரு ஆய்வை மேற் கொள்ளுமாறு என்னிடம் கேட்டு கொண்டார். இதற்காக ஒரு 500 கோடி நிதியையும் வழங்கினார். அணு சக்தி போன்ற ஆபத்து இல்லாத மின் சக்தி உற்பத்தி செய்யும் விசயங்களை பட்டியலிட்டேன்.
முதலில் நான் தேர்ந்தெடுத்தது நீர் மின்சக்தி. சரி நீர் மின் சக்தி வேண்டும் என்றால் அணை கட்ட வேண்டும். அதனால் நதியில் அணை கட்டலாம் என்று போனேன். அணை கட்டினால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்க படும், அவர்களால் காலம் காலமாக வாழ்ந்த பகுதியை மத்திய ஏகாதிபத்திய அரசு ஆக்கிரமிக்கறது. அதனால் அணையை கட்ட விடமாட்டோம் என்று மேத்தா பட்கர் தலைமையில் தோழர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதனால் அந்த திட்டத்தை கைவிட்டேன்.

அடுத்து அனல் மின் சக்தியை பயன் படுத்தாலம் என்று அதற்கான திட்ட வரைவை உருவாக்கலாம் என்று போனேன். அங்கு சென்றால் நீர் மின் சக்தியை விட அங்கு பிரச்சனை அதிகம். முதலில் எழைகள் நிலங்களை அரசாங்கம் பிடுங்க பார்க்கிறது என்று என்னை தோழர்கள் தடுத்தார்கள். நிலக்கரி போன்ற பொருட்களை எடுக்க போனால்  பழங்குடியினர் வாழ்வாதாரம் பாதிக்கபடும் என்று செங்கொடி ஏந்திய மக்கள் அருந்ததி ராய் தலைமையில் போராடினார்கள். அதனால் அந்த திட்டத்தையும் கை விட்டேன்.

 
சரி இது எல்லாம் வேண்டாம் பிரச்சனையே இல்லாத சோலார் தட்டுகளை உருவாக்கலாம் என்று அதிகாரிகளை கேட்டேன். அதற்கும் அதிக அளவு நிலக்கரி தேவை படுகிறது. அதற்கும் தோழர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அது தவிர நம்மிடம் அதை உருவாக்கும் தொழில் நுட்பம் கிடையாது. இதை வெளி நாட்டில் இருந்த தான் கொண்டு வர முடியும். வெளி நாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்கும் வருவதை தோழர்கள் விரும்ப மாட்டார்கள். அது மட்டும் இன்றி இதற்கும் மிக பெரிய இடம் தேவை. இதற்கும் கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்துவார்கள். அப்புறம் பிரிந்தா கரத் சிகப்பு சேலையை கட்டி கொண்டு விஜய் மாதிரி ஒரு காட்டு காட்டுவார் பரவாயில்லையா என்றார்கள். அதனால் அந்த திட்டத்தையும் கை விட்டேன்.

 
சரி சானியில் இருந்தாவது மின்சாரத்தை தயாரிக்கலாம் என்று மாட்டு பண்ணை வைத்து  மாடுகளை கொல்லவதை தடுக்கும் சட்டம் கொண்டு வந்தால் இது பார்பணீய சட்டம். ஹிந்து பாசிஸ்டுகளின் இந்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அலுவலகம் முன்பு மாட்டு கரியோடு உட்கார்ந்து கொண்டார்கள்.


 மேற்கத்திய நாடுகளை போன்று நாமும் பிற நாட்டின் வளத்தை ஆட்டைய போடலாம் என்று இராணூவ அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். இதை கேட்ட அவர் கேக்க பெக்க என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார். காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலத்தில் ஆயிரக் கணக்கான மக்களை கொல்லும் பிரிவினை வாதிகளை கைது செய்தாலே மனித உரிமை என்று கொடி பிடிக்கும் கம்யூனிஸ்டு தோழர்கள் அடுத்த நாட்டை தொட்டால் சும்மாவிடுவார்களா? அதுவும் சுற்றி இருப்பது முஸ்லீம் நாடு. ஓட்டு வங்கி பாதிக்கும் என்று உங்களை ஒரு வழி செய்து விடுவார் கம்யூனீஸ்டு தலைவர் ப்ரகாஷ்  கரத்தும் அவருடைய சகலை ப்ரனாய ராயின் தொலைக்காட்சி NDTV யும்  என்று என்னை எச்சரித்தார்.


இது எல்லாம் வேண்டாம்மக்கள் தொகையை குறைத்து இருக்கிற மின்சாரத்தை யாவது ஒழுங்காக பயம் படுத்தலாம் என்று நினைத்தால் இது சிறுபானமை மக்களுக்குத் எதிரான திட்டம். யார் எத்தனை குழந்தைகள் பெற்று கொள்வது எத்தனை திருமணங்கள் செய்து கொள்வது போன்றவை அவரவர் விருப்பம். இது சிறுபானமை மத சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என்று கூறி நரேந்திர மோடி போல் உங்களையும் மத வெறியன் என்று சொல்வார்கள். இது தவிர இதனால் ஏற்படும் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபடும் சிறுபானமை சமூகத்தவர் யாராவது காவல் துறை சுட்டு கொன்றால் உங்களை ஹிட்லராக்கி உங்களுக்கு அமெரிக்க விசா கிடைக்காமல் செய்துவிடுவார்கள்
சரி காற்று மூலமாவது மின்சாரம் தயாரிக்கலாம் என்றால் அதில் வரும் மின்சாரம் போதாது. அதுவும் தவிர அது தொடர்ச்சியாக மின்சாரம் தறாது. அப்படி மின்சாரம் ஒழுங்காக வராவிட்டால். சாலை மறியல் செய்து உங்கள் உருவ பொம்மையை எரிப்பார்கள் என்றார்கள்.

இப்படி முன்ன போன உதைக்கிராங்க, பின்ன வந்தா கடிக்கராங்கஇப்படி எந்த பக்கம் போனாலும் போராட்டம் நடத்துறாங்களே இதற்கு எதாவது தீர்வு காண யோசித்து யோசித்து பைத்தியம் ஆனேன். தற்பொழுது தான் கொஞ்சம் தெளிந்து உள்ளேன். தயவு செய்து கம்யூனிஸ்டு கழுதைகள் பேச்சை கேட்டு சிந்திக்க தொடங்கி எதாவது செய்ய தொடங்கினால் என்ன போல நீங்களும் பைத்தியம் ஆக நேரிடும் ஜாக்கிரதை


 
 - இப்படிக்கு
முன்னாள் கழுதை (கம்யூனிஸ்ட் தோழர்)

Sunday 23 October 2011

உரத்த சிந்தனை : மாயைகள் மறைந்த தேர்தல் :- ஆர்.நடராஜன்

நன்றி : தினமலர்
URL: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=336632

அரசியல் கட்சிகள், தம் தனிப்பட்ட செல்வாக்கை எடைபோட்டுக் கொள்ள, தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், பெரிதும் உதவியது. கட்சிகள் வேண்டுமென்றே தம்மைச் சுய பரிசோதனைக்கு உள்ளாக்கிக் கொண்டன என சொல்வதற்கில்லை; காரணங்கள் வேறு.

சட்டசபைத் தேர்தலில் தேறவில்லை, பிரதான எதிர்க்கட்சியாக முடியவில்லை, முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள், குடும்ப உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்ற நிலையில் இனி வென்றாலும், தோற்றாலும் ஒன்றுதான் என்ற மனநிலையில், தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளைக் கழற்றிவிட்டது.ஏற்கனவே சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றாகிவிட்டது. அது கூட்டணியினால் வந்தது என்ற நினைப்பு, தே.மு.தி.க., விஜயகாந்துக்கு இனியும் இருக்கக் கூடாது; சமச்சீர் கல்விப் பிரச்னையில் கம்யூனிஸ்ட்கள் மற்றும் உதிரிக்கட்சிகளின் ஆதரவு இல்லை; இப்படி உள்ளேயிருந்து முணுமுணுத்த அல்லது எதிர்த்த கட்சிகளை உதறிவிட்டால், என்ன பெரிய நஷ்டம் வந்து விடப்போகிறது என்ற மனப்பாங்கில் அ.தி.மு.க., நடந்து கொண்டது.கம்யூனிஸ்ட்கள் தவிர, உதிரிக் கட்சிகள் தங்கள் பலமாக நினைத்துக் கொண்டது, தாங்கள் சார்ந்திருந்த ஜாதிகளின் ஓட்டு வங்கியை. சிறிய வட்டத் தேர்தல்தானே, ஜாதி உணர்வு எடுபடும் என்ற நினைப்பில், பா.ம.க., உட்பட உதிரிக் கட்சிகள் களத்தில் இறங்கின. அவர்கள் நினைத்தபடி, ஜாதி ஓட்டுகள் கை கொடுத்திருந்தால், சில ஊர்களின் தேர்தல் முடிவுகள் மாறிப் போயிருக்கும். ஆனால், ஓட்டளிப்பில் ஜாதி அபிமானம் வெளிப்படவில்லை என்பதே உண்மை.

லோக்சபா தேர்தலில் ஆறு தொகுதிகளிலிருந்து ஒரு வேட்பாளர் அல்லது வெளியூர் வேட்பாளர்; அவ்வளவாக அறிமுகமாகாதவர், அறிமுகமாகியிருந்தாலும் தொகுதிப் பக்கம் அடிக்கடி வராதவர், நெருங்கிப் பழகாதவர் என்று காரணங்களை அடுக்க முடியும். சட்டசபைத் தேர்தலிலும் வேட்பாளர்களைப் பொறுத்தவரை, இதே காரணங்கள் எடுபடும். ஆனால், உள்ளாட்சித்தேர்தல் அப்படியல்ல. வேட்பாளர் வார்டு மக்களுக்கு நன்றாக அறிமுகமானவரே; நகராட்சித் தலைவர், மேயர் பதவிகளுக்குப் போட்டியிட்டவர்களும், அந்தந்த வட்டார மக்களுக்கு நன்கு பழகியவர்களே.இந்நிலையில், அ.தி.மு.க., - தி.மு.க., என்ற இரண்டு பெரிய கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் ஜாதிக்கு அதிக இடம் கொடுக்கவில்லை என்றே சொல்லவேண்டும் ஆகவே, வேட்பாளரின் வெற்றிக்கு, கட்சி, 75 சதவீதம் காரணம், தனி செல்வாக்கு, 20 சதவீதம், ஜாதி அபிமானம் என இருந்திருந்தால் அது வெறும், 5 சதவீதம் என, மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். வேட்பாளர்களின் பட்டியல், தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கை, வேட்பாளர் ஜாதியினரின் எண்ணிக்கை இவை பற்றி சமூகவியலாளர்கள் உடனே ஆய்வு செய்து, இந்த அனுமானத்தை நிரூபிக்கலாம்; நிரூபிக்க வேண்டும்.பத்து மாநகராட்சிகளும், அ.தி.மு.க., வசம்; பல நகராட்சிகளும், பேரூராட்சிகளும் அதன் வசம், என்பது மகத்தான வெற்றி. அதே நேரம் கவனிக்கப்பட வேண்டியது ஜாதியை, நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்னிறுத்தி வந்துள்ள - பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் வேறு சில உதிரிக் கட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ள யதார்த்தம். இதனால், ஜாதிகளே தமிழகத்தில் இல்லை என, அவசரப்பட்டுப் பெருமை பேசிக்கொள்ள வேண்டாம்; ஜாதிகள் இருக்கின்றன. ஆனால், அவை அரசியல் சக்திகள் அல்ல என்ற நிலை உருவாகி வருகிறது. வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை ஜாதி நிர்ணயிக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகளிலிருந்து தெரிய வருகிறது.
பா.ம.க., அவ்வப்போது, ஜாதி உணர்வை நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளிப்படுத்தும். இத்தேர்தலில் அக்கட்சி, 58 நகராட்சி உறுப்பினர் இடங்களைப் பெற்றிருக்கிறது. இதுதவிர, இரண்டு பேரூராட்சி தலைவர் பதவி, 108 பேரூராட்சி உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருக்கிறது. மாநிலத்தின் மொத்த உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது, இது வெற்றி அல்ல.

சென்னையில் ஒரு வார்டில் வெற்றி, 18 நகராட்சி உறுப்பினர்கள் வெற்றி என்பதுதான் விடுதலை சிறுத்தைகளின் நிலையும்.பொதுமக்கள் காதில் பூ சுற்றுவதற்காக, இக்கட்சிகள், சமூக நீதி, உயர் ஜாதி ஆதிக்கம் என்று பேசி வந்தாலும், பெரிய கட்சிகளிடம் கூட்டணி பற்றி தனியறையில் பேரம் பேசியபோது, "எங்கள் கட்சிக்கு இந்த ஜாதியின் ஓட்டு வங்கி இவ்வளவு சதவீதம்' என்று சொல்லியிருந்ததெல்லாம் கவைக்குதவாத வாதங்களாக, இப்போது நொறுங்கிப் போய்விட்டன. பெரிய கட்சிகள் இனி விழித்துக் கொள்ளும்.பத்து மேயர்கள், 88 நகராட்சி சேர்மன் பதவிகள் உட்பட மொத்தம், 6,619 இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்கிறது. நகராட்சி தலைவர் பதவிகள், 23 உட்பட, 3,349 இடங்களில், தி.மு.க., வெற்றி பெற்றிருக்கிறது. சுயேச்சைகள், ஐந்து நகராட்சிகள் உட்பட, 2,906 இடங்களை வென்றிருக்கின்றனர். ஆனால், பா.ம.க.,வில் வெற்றி பெற்றவர்கள், 235 பேர் மட்டுமே; விடுதலைச் சிறுத்தைகள் 31, புதிய தமிழகம் 9, பகுஜன் சமாஜ் கட்சி 4.ஜாதிக் கண்ணோட்டத்தில் இன்னமும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் ஓட்டளித்த மக்கள் தந்துள்ள இந்த முடிவை அலசிப் பார்க்க வேண்டும்.

வெவ்வேறு காரணங்களினால், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் கூட்டணிக் கட்சிகளைக் கழற்றி விட்டாலும், இந்த உள்ளாட்சித்தேர்தலில் அவர்கள் தங்கள் பலத்தை நிர்ணயம் செய்துகொள்ள முடிந்தது; உதிரிக் கட்சிகளை எடைபோட முடிந்தது. தி.மு.க.,வும், தான் பலமிழந்து போனது ஏன் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம்.எப்படியும், மா.சுப்பிரமணியன் சென்னை மேயர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற தி.மு.க.,வின் நம்பிக்கை தகர்ந்து போனதற்குக் காரணம், "2ஜி' பிரச்னையோ, குடும்ப உரசல்களோ அல்ல. அக்கட்சி கவுன்சிலர்கள் நடந்துக் கொண்ட முறையே காரணம். இரண்டு வீடுகளுக்கு ஒரே குழாயில் தண்ணீர் வருவதில் சிரமம் இருக்கிறது என்பதால், தனிக் குழாய் இணைப்பு கேட்க விரும்பி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியை அணுகிய போது, அவர், "அய்யா, வாரியத்திற்கு, 15 ஆயிரம்; கவுன்சிலருக்கு, 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். கவுன்சிலர் ஒப்புதல் கொடுத்தால் தான் வேலை நடக்கும்!'

இதுபோல் மின் இணைப்பு, புதுக் கட்டடம், பழைய கட்டடப் புதுப்பிப்பு என்று எல்லாவற்றிற்கும் கவுன்சிலர்களுக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்ற நிலையில் மக்கள் நொந்துபோயினர். பழைய கவுன்சிலர்கள் போய், புதிய கவுன்சிலர்கள் வந்ததற்குக் காரணம் இதுவே. கட்சித் தலைமை வானத்தில் வேலிகட்டிக் காற்றைக் கூறுபோட்டதில் லட்சக் கணக்கான கோடிகளைச் சுருட்டியதாகக் குற்றச்சாட்டு வந்தபோது, அது சுவாரஸ்யமான செய்தி மட்டுமே என்று எடுத்துக் கொள்ள முடிந்த மக்களால், பூமியைத் தோண்டுவதற்கு, பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்ற கெடுபிடி வசூல் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.புதிய கவுன்சிலர்கள் இந்தப் பாடத்தைப் புரிந்துக் கொள்வது நல்லது.கவுன்சிலர்களே இப்படியென்றால், மேயர்களை அணுகியவர்கள் பட்ட பாட்டைத் தெரிந்துக் கொண்டால், படுவேதனைதான்! கேட்டால்தான் தெரியும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதைப் புரிந்துக் கொண்டால், மறு தேர்தலில் ஜெயிக்க முடியும். இல்லையென்றால், தாமும் தோற்று கட்சிக்கும் கெட்ட பெயர் வாங்கி தருவர்.

கட்சி தலைமை லஞ்சத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தால் தான், இதை வெற்றி பெற்றவர்களுக்கு உணர்த்த முடியும்.ஆக, கட்சிகள் ஓட்டுகளை இழக்க ஊழல் காரணம்; ஓட்டுகளைப் பெற ஜாதி காரணமல்ல என்பதை இப்போதாவது பெரிய கட்சிகள் புரிந்துக் கொள்ள வேண்டும்.தேர்தலில் வெற்றி பெற ஜாதி அபிமானம் என்ற மாயையைத் தொலைக்க வேண்டும் என்பதை, பெரிய அரசியல் கட்சிகள் புரிந்துக் கொள்ள இன்னொரு தேர்தல் தேவையில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஜாதிக்காரர்களாயிருந்தாலும், கறாராக லஞ்சத்தைக் கறந்து விடுகின்றனர். லஞ்சம் அதிகம் வந்தால், ஜாதியை மட்டுமல்ல, கட்சியையும் மக்கள் உதறிவிடுவர் என்பதை மட்டும் புரிந்துக் கொண்டால் போதும்.சட்டசபைத் தேர்தலில் கூட்டணி பேரங்களில் வெளிப்படையாகச் சொல்லப் பட்டது அந்தக் கட்சிக்கு இவ்வளவு ஓட்டு சதவீதம், அந்தக் கட்சிக்கு இவ்வளவு சதவீதம் என்ற கணக்கு. இந்தக் கணக்கைச் சொன்ன சிறிய கட்சிகளும், ஏற்றுக்கொண்ட பெரிய கட்சிகளும், ஓட்டு வங்கிக்குப் பின்னே ஜாதி ஓட்டுகள் இருக்கின்றன; அந்தந்த ஜாதி மக்களை இந்த தலைவர்கள் கைக்குள் போட்டுக் கொண்டிருக்கின்றனர் என்ற மாயையை நம்பினர். அந்த மாயை, ஜாதிக்கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் காணாமல் போனதன் மூலம் உடைந்து போய்விட்டது.இட்டார் இடாதார், அதாவது ஓட்டு இட்டார், ஓட்டு இடாதார் என்ற இரண்டு தவிர, வேறு ஜாதிகள் இல்லை என்பதை நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிவு உணர்த்துகிறது. சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபைத் தேர்தலில் கூட, "ஜாதி' ஒரு அம்சமாகக் கருதப்பட்டதே, இப்போது திடீரென்று அந்த உணர்வு முடங்கிவிட்டதா அல்லது காணாமல் போய்விட்டதா என்ற கேள்வியும் அர்த்தமில்லாதது. அப்போது புரியாதது இப்போது புரிகிறது; அவ்வளவு தான். நிகழ்கால நிஜங்கள் உடனுக்குடன் புரிவதில்லை என்பதே வரலாற்றின் வினோதப் போக்கு.

ஆர்.நடராஜன் - விமர்சகர், அமெரிக்க தூதரகமுன்னாள் அரசியல் ஆலோசகர்

இக் கட்டுரையளரைக் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ள: hindunatarajan@hotmail.com