Saturday 8 September 2012

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்


ஒவ்வொரு முறையும் டாஸ்மாக்கை தாண்டி போகும்போதெல்லாம் மனசும் வயிறும் எரியும்.

தமிழகத்தில் ரேசன் கடைக்குப் போக மறுக்கும் ஆண்களின் கூட்டம் டாஸ்மாக்கில் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் சனிக்கிழமை என்றால் கூட்டம் இன்னும் அதிகமாகும்.




முன்பெல்லாம் குடிகாரர்களைக் கேவலமா பார்ப்பார்கள். ஆனால் இன்று கவர்மெண்டே சாராய வியாபாரம் செய்ய ஆரம்பித்த பிறகு குடியை fantasy-யாக மாற்றி விட்டார்கள்.

சினிமா, டிவி, பத்திரிகை என அனைத்து ஊடகங்களிலும் குடி கொண்டாடப்படுகிறது. ஹீரோக்களின் எண்ட்ரியே பாட்டில் ஓபனீங்கில் தான் ஆரம்பிக்கிறது.. ஃபேஸ் புக்கில் தண்ணியடிப்பதை சிலாகிக்கிறார்கள் சில நண்பர்கள்..

சாராய வியாபாரம் செய்வது ரவுடிப்பயலுக வேலையா இருந்ததை மாற்றி அதைப் பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்தார்கள் திராவிட ஓட்டுப்பொறுக்கிகள் .





நண்பர்கள் கூட்டத்தில் ``நீங்க தண்ணியடிப்பீங்களா பாஸ்’’ என்று திடிரென எழும் கேள்விக்கு, ``இல்ல’’ என்று பதில் சொல்பவர்கள் வெட்கப்பட வேண்டிய சூழல். ``அட என்ன பாஸ்.. தண்ணியடிக்காம நீங்களெல்லாம் எதுக்கு உயிர் வாழ்றீங்க..’’ என்ற நக்கல் வேறு வரும்.


இதில் குடிக்கும் நண்பர்கள் தவறாமல் ஒரு டயலாக்கை சொல்வார்கள்.. ``ஐயோ பாஸ்.. எப்பவாவது தான் குடிக்குறது.. அதுக்கு அடிமையாவெல்லாம் ஆக மாட்டோம்’’என்று. அதைக் கேட்டுக்கும் போதெல்லாம் அவர்களை நினைத்து பரிதாபமாக இருக்கும்.

ஒருவனுக்குச் செக்ஸ் விசயத்திலோ, லஞ்சம், ஊழல், திருட்டுத் தனம் பண்ணுவதில் வீக்னஸ் இருக்கிறது என்றால், என்றாவது ஒருநாள் அவன் சிக்கும் போது அவமானத்தில் மனம் திருந்த வாய்ப்புண்டு. கவுன்ஸ்லிங்க் மூலமாகத் திருத்தலாம். ஆனால் குடி அப்படியல்ல.. அவனின் அத்தனை நரம்புகளும் அதற்கு அடிமையாக்கப்பட்டு அதில்லாமல் அவனில்லை என்ற நிலைக்குத் தள்ளிவிடும். நூற்றில் ஒரு கேஸ் தான் தானா அறிவு வந்து திருந்துவதுண்டு.



இந்தாண்டு 18 ஆயிரம் கோடிக்கு வித்துருக்கோம் என்று சாராய வியாபாரத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தைச் சாதனையாகச் சொல்கிறார் ஜெயலலிதா. நாட்டில் இன்னும் குடிக்காமல் இருக்கும் அத்தனை பேரையும் எப்படிக் குடிகாரர்களாக்கலாம் என்று அரசாங்கம் திட்டம் தீட்டுகிறது.


சிலர் திருட்டுத்தனமாகச் சாராய வியாபாரம் செய்தபோது குடித்தவர்களின் எண்ணிக்கை கவர்மெண்டே வியாபாரம் செய்ய ஆரம்பித்தப்பிறகு நினைத்துப்பார்க்க முடியாதளவுக்கு உயர்ந்திருக்கிறது.



குடியை சகஜமாக்கியதன் விளைவு ஒருவேளை நாளை தமிழகத்தில் டாஸ்மாக் மூடப்பட்டால் தமிழகமே மனநோயாளிகளின் கூடாரமாக மாறியிருக்கும். அந்தளவுக்குக் குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது அரசின் சாராய வியாபாரம்.




டாஸ்மாக்கில் சிறுவர்களோ, பொம்பளப்பிள்ளையோ காசை நீட்டுனா பாட்டில்.. அது மட்டும் தான் ஓட்டுப்பொறுக்கிகளின் பாலிஸி. பணம்.. பணம்.. எப்படியாவது மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் விஷமாகி குடிகாரர்கள் இறக்கிறார்கள் என்பதற்காகக் கவர்மெண்டே சாராய வியாபாரம் செய்வதை எப்படி ஏற்க முடியும். ஒரு தவறை திருத்த நடவடிக்கை எடுப்பது சரியா.. இல்லை ஸ்லோ பாய்ஸன் தயாரிப்பது சரியா..


இதில் ஆட்டோ டிரைவரும் ஐ.டி.காரனும் ஒண்ணா தண்ணியடிக்குறதை தடுக்கு எலைட் பார் வேறு.



கருணாநிதி ஜெயலலிதாவுக்கிடையே பரஸ்பரம் எவ்வளவு கொலைவெறி இருந்தாலும் இந்தச் சாராய வியாபாரத்துல மட்டும் அவ்வளவு ஒற்றுமை. எந்த ஆட்சி மாறினாலும் அதற்கு மட்டும் தடையில்லை. கருணாநிதி ஆட்சியிலும் சசியின் மிடாஸில் இருந்து தான் சரக்கு சப்ளையானது.

ஒரு குடும்பத் தலைவனைக் குடிக்கு அடிமையாக்கி அவனின் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாயை ஆட்டையப்போடும் அரசு, அதில் ஒரு ரூபாயை அரிசி, மிக்ஸி, ஃபேன் என்று இலவசங்கள் கொடுக்கப் பயன் படுத்துகிறது. எவ்வளவு கேவலமான திருட்டு.. பணம் கிடைக்கிறது என்பதற்காக எங்கள் தலைமுறையையே போதைக்கு அடிமையாக்குறார்கள்.
வீச்சருவாளும் கையுமா பனங்காட்டுக்கு நடுவிலும், ஒடங்காட்டுக்கு நடுவிலும் போலீசுக்கு தெரியாமல் பதுங்கியிருந்து வெள்ளை கேனில் சாராயம் வித்தவர் கந்தையா அண்ணாச்சி. சிறுவனாக இருந்த போது ஒரு முறை தாத்தா ஒருவருக்காகப் பாக்கெட் சாராயம் வாங்க நண்பனோடு போனபோது, ``சாராயம் வாங்க வர்ற அளவுக்குப் பெரியாளாயிட்டிங்களாடா.. போய் பெரியவங்கள வந்து வாங்க சொல்லுங்க’’னு பொடதில தட்டி விரட்டுனார் கந்தையா அண்ணாச்சி.

அவர் என்றைக்கும் ஒரு சின்னப்பயனுக்குச் சாராயம் கொடுத்து பார்த்ததில்லை.

ஆனால் பணம் கிடைக்கிறது என்பதற்காகச் சிறுவர்களைக் கெடுத்துவிடக்கூடாது என்று நினைத்த படிக்காத கந்தையாக்களிடம் இருந்த நேர்மை, இந்த ஓட்டுப்பொறுக்கிகளிடம் இல்லை..
இதை எழுதுவதற்கு உனக்கென்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறீர்களா.. ஒரு குடிகாரரின் பிள்ளை என்ற சிறப்பான தகுதி எனக்குண்டு.. :(
Posted by cartoonist bala in his blog ( மேல் உள்ள கருத்துக்கள் கார்டூனிஸ்ட் பாலாவின் குமுறல்கள் ) [ பலரின் குமுறலும் அதுதான் ]


                                                           



பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை தனியாரிடம் விட்டுவிட்டு அரசுகள் மதுக்கடைகளை நடத்தத் தொடங்கியுள்ளன. அரசு எந்திரம் இலக்கு வைத்து மதுபான விற்பனையை அதிகப்படுத்தியுள்ளன. பள்ளி, கல்லூரிகள், கோயில், மருத்துவமனை, குடியிருப்பு ஏன் சமத்துவபுரங்களில் கூட டாஸ்மாக் கடைகள் திறக்கக்கப்படுகின்றன.




சாலையோரங்களில் இருக்கும் டாஸ்மாக் மதுபானக்கடையில் குவாட்டர் வாங்கி மூடியைத்திறந்து அப்படியே ராவாக மடமடவென்று குடித்துவிட்டு அப்படியே நிதானமிழந்து வீழ்பவர்களை நாம் தினந்தோறும் பார்க்க முடியும். இதன் காரணமாக நிகழும் சாலை விபத்துகள் ஏராளம். மதுவைத் தவிர பிற காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் பாதசாரிகளின் உயிருக்கு உத்திரவாதமின்றி அமைக்கப்படுகின்றன. சைக்கிளில் செல்வோரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது. எவ்வளவோ தொழில்நுட்பங்கள் முன்னேறியிருக்க சைக்கிள் பின்புற பிரதிபளிப்பான் (indicators) இன்னும் பழையபடிதான் உள்ளது. அதுகூட எதேனும் லேசாக மோதினால்கூட நொறுங்கிவிடும். சாலைகளில் மரங்களில் ஒட்டப்படும் பிரதிபளிப்பான் கூட பரவாயில்லை. சைக்கிள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஏன் இவற்றை கவனிக்க மறுக்கின்றன. பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள் சாலைகளில் சென்று வீடு திரும்புவது உறுதியில்லாத நிலை உள்ளது.
திருவாரூர் – திருத்துறைப்பூண்டி மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி குடிபோதை சாலை விபத்துகள் நடந்தேறுகின்றன. சென்ற ஆண்டில் மணலி கிராமத்திற்கருகே நடந்த சாலை விபத்தொன்றால் நான் பல கிலோ மீட்டர் தூரம் நடந்துவர வேண்டிய நிலை ஏற்பட்டது.
திருத்துறைப்பூண்டி திருவாரூர் நெடுஞ்சாலையில் ஆலத்தம்பாடி, மணலி ஆகிய கிராமங்களுக்கு இடையில் பழையங்குடி ஊராட்சிப் பகுதியில் தலைவர் ஏ.எஸ்.பாண்டியன் மதுபான கடைப்பகுதி என எச்சரிக்கைப் பலகை வைத்துள்ளார். தமிழகமெங்கும் இந்த மாதிரி எச்சரிக்கைப் பலகை வைக்கவேண்டும். தலித் குடியிருப்புகள் நிறைந்த இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. குடிபோதை விபத்துகள் அடிக்கடி நிகழும் இப்பகுதியில் வேறுவழியின்றி ஊ.ம.தலைவர் எச்சரிக்கைப் பலகை வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக வேகத்தடைகள் அமைக்க கோரிக்கைகள் வரலாம். தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளிக்கூடப் பகுதிகளில்கூட வேகத்தடைகள் வைக்கப்படுவதில்லை.
பள்ளிப்பகுதிகளில் வருங்கால அப்துல் கலாம்கள் நடமாடும் இடம் என்று பல இடங்களில் விளம்பரப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நமது குழந்தைகளை இதைவிட மோசமாக இழிவுபடுத்தமுடியும் என எனக்குத் தோன்றவில்லை. இதைப்போல ஒவ்வொரு டாஸ்மாக் கடை அருகே சாலைகளில் மாநில அரசின் வருவாயைப் அதிகரிக்கும் புரவலர்கள் நடமாடும் இடம் வாகனங்கள் மெதுவாகச் செல்லவும் என்றுஅறிவிப்புப் பலகைகள் வைக்கலாம்.
மக்கள் நலனைக் கணக்கில்கொள்ளாது வருவாயை மட்டும் நம்பி அரசு நடத்தும் டாஸ்மாக் சூதாட்டத்தில் அப்பாவி ஏழை கூலித்தொழிலாளிகள் பலியாவது வேதனையான உண்மை. கள்ளுக்கடைகளை மூடிவிட்டு சசிகலா, விஜய் மல்லையா போன்ற சாராய முதலைகள் நலன்கள் மட்டும் அரசால் பாதுகாக்கப்படுகின்றன.



100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்படும் கூலித்தொகையில் பெரும்பகுதி டாஸ்மாக் கடைகளையே சென்றடைகிறது. குடியால் உடல்நலம் கெட்டு மரணமடைவது ஒருபுறமிருக்க குடிபோதை விபத்துகள் நடப்பதால் பல்லாயிரம் உயிர்கள் மாண்டுபோகிறது. ஜெ.ஜெயலலிதாக்களும் மு.கருணாநிதிகளும் இந்நிலை நீடிக்கவே விரும்புகிறார்கள்.



அப்போதுதான் குவாட்டர் பாட்டிலில் குடிமகனின் வாக்கைத் தக்கவைக்க முடியும் என்பது இவர்களது அசாத்திய நம்பிக்கை. இதை மாற்றக்கூடிய சக்தி நமது குடிமகன்களிடம் இருக்கிறதா என்பதே நம்முன் எழும் மிகப்பெரிய கேள்வி.

டாஸ்மாக் தான் இந்த மாநிலத்தின் விலாசமாகி போனது என்றால் அது மிகையல்ல.
ஆம் தெருக்கு மூணு டாஸ்மாக்கை திறந்துக் கொண்டிருக்கும் அரசின் போக்கு அப்படித்தான் உள்ளது. டாஸ்மாக் என்ன பாரம்பர்ய கம்பெனியா?

இல்லவே இல்லை- அதன் ஆரம்பம் வெறும் 29 வருடங்களுக்கு முன்புதான்.

1937 ஆம் ஆண்டு தமிழகத்திற்க்கு மதுவிலக்கை கொண்டு வந்தது சி ராஜாகோபாலச்சாரிதான். ஆனால் டாஸ்மாக் என்னும் மொத்த குத்தகை சாராய வியாபாரியை உரு ஆக்கிய பெருமை எம்ஜிஆரை தான் சேரும்.

1983 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த நிறுவனம் முதலில் எல்லா தயாரிப்பாளர்களின் உற்சாக பானத்தையும் மொத்தமாக வாங்கி தமிழகத்தின் எந்த ஒரூ மூலை முடுக்கு ஹோட்டல்கள் மற்றும் பார்களுக்கும் சப்ளை செய்து வந்தது.

சி ராஜகோபால் கொண்டு வந்த மதுவிலக்கு என்ன ஆயிற்று என கேட்டால்- ஆம் அது 1937 – 2001 ஆம் ஆண்டு வரை இருந்தது.

இந்நிலையில் அதை உடைத்து முதன் முதல் தமிழகத்தில் குடிமகனாக உருவாக்கிய பெருமை கலைஞருக்குத்தான் சேரும்.

ஆம் அவர் அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு இறந்த போது இடைக்கால முதலமைச்சரானார். அடுத்து நான் முதலைமச்சராக வந்தால் மதுவிலக்கை ஒழிப்பேன் என்பது ஒரு மெயின் தேர்தல் அஜென்டா ஆக்கி 1971 ஆம் ஆண்டு ஆட்சி கட்டிலில் உட்கார்ந்த போது தமிழகத்தில் முழு மதுக்கொள்கையை கொண்டு வந்து அதை 1974 முடிவுக்கு கொண்டு வந்த பின் 1976 தேர்தலில் தோற்றும் போனார்.

அதை ஒரு பெரிய அஜென்டாவாக்கி முதலைமச்சர் ஆனார் எம்ஜிஆர்- 1977 ஆம் ஆண்டு.
ஆனால் மது என்ற போதை வஸ்து இல்லாமல்போனால் நம்மின் அடுத்த ஆட்சி சந்தேகத்திற்க்கு உள்ளாகும் என தெரிந்து 1981 – 1987 ஆம் ஆண்டு வரை அது தமிழகத்தை அழிவு பாதைக்கு கொண்டு சேர்த்தது.

இதற்க்கிடையில் சாராய வியாபாரியாக சில உடையார்கள் படையார்கள் உலா வந்த நேரத்தில் தான் 1983 ஆம் ஆண்டு மது உண்டு ஆனாலும் அது அரசின் கேட் வே மூலம் என்று டாஸ்மாக் உதயமாயிற்று.

பழைய குருடி கதவை திறடி கதை தான் மதுவிலக்கு

ஆட்சி கட்டிலில் உட்கார்ந்த ஒரே வருடத்தில் மீண்டும் மதுவியாபரத்தை கொண்டு வந்தது ஜெயலலிதா தான் 1990 – 91.

இப்படியே ஒவ்வொரு முதலமைச்சரும் பந்தாடிய ராஜாகோபாலாச்சாரியின் மதுவிலக்கு 2001 ஆம் நிரந்தரமாக அடக்கம் செய்யபட்டது.
அரசு சாராயக்கடை – கடா மார்க் ஊருக்கு ஒரு அரசு சாராய ஃபாக்டரி எல்லாம் இந்த காலகட்டத்தில் தான்.

இருந்தாலும் ஒரு கிளாஸ் 8 ரூவா ஒரு முழு பாட்டில் 40 ரூவா வரை இருந்த சாராய வியாபாரத்தால் பெரிதாக சாதிக்கமுடியாமல் போனதால் அரசே இந்த நவீன சுடுகாட்டை தெருக்கு தெரு கொண்டு வந்து சேர்த்து மட்டுமில்லாமல் உலகின் நெ-1 பிராஃபிட் அரசு கம்பெனியாக உருவெடுத்தது என்றால் மிகையில்லை.

சார்ந்த ஒயின்ஷாப், ஜாதிக்காரர்களின் ஒயின்ஷாப் ஆதிக்கம், உள் அடி விலை வைத்து ஏலத்தை ஏய்ப்பது எடுத்தவனை வெட்டுவது என தனியார் ஒயின்ஷாப்பை முதலில் இரும்பு கரம் கொண்டு அடக்கி தமிழகத்தில் திராவிட அரசே பெரிய தில்லாலங்கடி இதுல நீங்க எதுக்குன்னு முதன் முதலாய் 29 நவம்பர் 2003 ஆண்டு அரசு விற்க வேண்டிய கல்வியை தனியாருக்கு கொடுத்து தனியார் விற்க வேண்டிய சாராய பிஸினஸை அரசு எடுத்து கொன்டு ஆரம்பித்த தனிகாட்டு பிஸினசை 2004 ஆண்டு முதல் எல்லா பிரைவேட் ஒயின்ஷாப்புகளுக்கும் அரசின் பச்சை பெயிண்ட் அடிக்கபட்டு கையகப்படுத்தபட்டது.


2003 – 2004 ஆம் ஆண்டு வருமானம் 2828.09 கோடியாய் இருந்த வியாபரம் வருடத்திற்க்கு 100% சதவிகிதம் என அதிகரித்து 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக.
இப்போது பிஸினஸ் 7300 கோடியாய் இருக்கும் இந்த தங்க சுரங்கத்தை மூடினால் அதில் கிடைக்கும் 58 – 73% சதவிகித வரி பணத்தை இழக்க தயாராய் இல்லாமல் அதற்க்கு உரம் போட்டு வளர்த்து இன்றோடு 9 வருட டாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் சுமார் 21,000 கோடிகளாய் நின்றால் உலகின் முதல் லாபத்தோடு இயங்கும் அரசு கம்பெனி இதை தவிர வேறு என்ன இருக்கமுடியும்.

சாதாரண சரக்குக்கு 58% வரை வரி, ஃபாரின் லிக்கருக்கு 73% வரி இந்த பிஸினஸை தவிர வேறு எதனால் தரமுடியும் என வளர்த்த கட்சிகளோ அல்லது அதை தாங்கி பிடித்த கூட்டணி கட்சிகளும் இப்போது நீலி கண்ணீர் வடித்தால் என்ன செய்ய முடியும்.
மது விலக்கு இப்போது அமுலுக்கு மட்டும் வந்தால் பலரின் நிலமை என்னவாகும் என்று யாருக்கு தெரியாது???

ஆனால் விளைவுகள் முதல் இரண்டு வருடங்களில் வருமானம் ஆகட்டும், கள்ள சாராயமாகட்டும், பர்மாபஜார் சரக்கு வியாபாரம் ஆகட்டும் ஒரு பெரிய சவால்தான்.
ஆம் ஒரு விஷயம் தமிழகத்தில் 92% சதவிகிதம் கள்ள சாராயம் காய்ச்சுவது ஒழிந்தாலும் இன்று ஆயிரம் மடங்கு வளர்ந்து நிற்கும் குடிகாரர்களின் நிலைமை……………


55. கொடுங்கோல் மன்னவன் நாட்டின் ......

படுங்கோலம் அறியாமல் தண்டலையார்
திருப்பணிக்கும் பங்கம் செய்வார்!
நெடுங்கோளும் தண்டமுமாய் வீணார
வீணனைப்போல் நீதி செய்வார்!
கெடுங்கோபம் அல்லாமல் விளைவுண்டோ?
மழையுண்டோ? கேள்வி யுண்டோ?
கொடுங்கோல்மன்னவன் நாட்டிற் கடும்புலிவா
ழுங்காடு குணமென் பாரே!


(தொ-ரை.) படும் கோலம் அறியாமல் தண்டலையார் திருப்பணிக்கும்
பங்கம் செய்வார் - அடையப்போகும் தன்மையை உணராமல் தண்டலையாரின் திருத்தொண்டுக்கும் குறைவு புரிவார்கள், வீணார வீணனைப்போல் நெடுங்கோளும் தண்டமுமாய் நீதிசெய்வார் - வீணார வீணன் என்பானைப் போலப் பெரிய கொலையும் தண்டனையுமாக அரசியல் புரிவர், (இதனால்) கெடும்கோபம் அல்லாமல் விளைவு உண்டோ மழை உண்டோ கேள்வி உண்டோ - (தம்மைக் கெடுக்கும்) சீற்றமேயன்றி நாட்டில் விளைவும் மழையும் கேள்விமுறையும் இருக்குமோ?, கொடுங்கோல் மன்னவன் நாட்டில் கடும்புலி வாழும் காடு குணம் என்பார் - முறைதவறிய அரசன் வாழும் நாட்டில் வாழ்வதினும் கொடிய புலி வாழும் காடு நலந்தரும் என்று அறிஞர் கூறுவர்.

(வி-ரை.) கோள் - கொலை. அரசன் ஆட்சி நன்றாயிருப்பின்
மழைபெய்து விளைவு பெருகி நாடு வளமுற்றிருக்கும். இன்றேல் இவை
அழியும் என்று உலகம் கூறும். ‘கொடும்கோல் மன்னன் வாழும் நாட்டில்
- கடும்புலி வாழும் காடு நன்றே' என்று வெற்றி வேற்கை கூறும்.
வீணன் : வீணாறு என்னும் ஆற்றை வெட்டியவன்.
இவ் உலகில் சாராயம் விற்கும் இரு அரசுகள் கேரளா , தமிழ்நாடு.
என் தமிழ்நாடே ! உன் மனம் நிம்மதி அடைந்ததோ !
எஞ்சி இருந்த மானமும் குடித்துக் குடித்துக் குடித்துக்கொண்டே மண்ணாகி போனதே !
நடை பிணமாய் வாழ்ந்தென்ன ! மனங்கேட்டவர்களே !
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் !

பி கு : கூல்ட்ரிங்க்ஸ் மாதிரி டாஸ்மாக் ஆகாமல் இருந்தால் சரிதான்




1 comment:

Ra Muruganandam said...

Nice write up & pics...